ஆயில் புல்லிங் முறையை அறிமுகப்படுத்திய தமிழக டாக்டருக்கு விருது!
திருச்செங்கோடு கே.எஸ்.ஆர் பல் மருத்துவ அறிவியல் மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தில், உயர்நிலை பேராசிரியராக பணியாற்றி வரும் ஷரத் அசோகன், தமிழ்நாட்டிலேயே பல் மருத்துவ ஆராய்ச்சிக்காக பிஎச்டி எனும் முனைவர் பட்டம் பெற்றுள்ள முதல் குழந்தைகள் பல் மருத்துவர் இவர்.
பல் மருத்துவம் தொடர்பாக இவர் எழுதிய கட்டுரைகள் பல இந்தியா மற்றும் வெளிநாட்டு பத்திரிகைகளில் பிரசுரமாகியுள்ளன. கனடா, ஷாங்காய் ஆகிய நாடுகளில் நடைபெற்ற கருத்தரங்குகளில் ஷரத் அசோகன் பங்கு பெற்று பல் மருத்துவம் குறித்து ஆற்றிய உரைகள் பாராட்டுகளைப் பெற்றுள்ளன.
சமீபத்தில் ஆயில் புல்லிங் எனப்படும் வாய் மற்றும் பற்களை எண்ணெயின் மூலம் சுத்தப்படுத்தும் முறையை ஆராய்ந்து அறிமுகப்படுத்தியவரும் இவரே. அதிலும் இவர் டாக்டர் பட்டம் பெற்றுள்ளார்.
இதற்காக அவருக்கு விருதுநர் ரோட்டரி சங்கம் சமீபத்தில் பாராட்டு விழா ஒன்றை நடத்தி அவரை கெளரவப்படுத்தியது.
பாராட்டு விழா நிகழ்ச்சியை ரோட்டரி சங்க தலைவர் மா.அக்னி முத்து ஏற்பாடு செய்தார். நிகழ்ச்சியில் டாக்டர் ஷரத் அசோகனை அறிமுகப்படுத்தி, எம்.ஏ.பி.ஆர்.கிருஷ்ணமூர்த்தி பேசினார். மதுரை அப்பல்லோ மருத்துவமனையைச் சார்ந்த, இதய நோய் மருத்துவ வல்லுநர் டாக்டர் என்.காசிராஜன், ஷரத் அசோகனின் சாதனைகளை பெருமைப்படுத்தி பேசினார்.