வேலூர் அருகே தில்லாலங்கடி தபால் அலுவலக அதிகாரி கைது
வேலூர்:நேர்காணலுக்கு ஆர்டர் கடிதத்தை கொடுக்காமல் தில்லாலங்கடி வேலை காட்டி மோசடியில் ஈடுபட்ட தபால் அலுவலக அதிகாரியை போலீசார் கைது செய்தனர்.
வேலூர் அருகே நாகநதி கிளை தபால் அலுவலகம் உள்ளது. இங்கு தபால் அதிகாரி பதவி காலியாக இருந்தது. இந்த பணிக்கு அதே பகுதியைச் சேர்ந்த பூங்குழலி என்பவர் விண்ணப்பித்து இருந்தார். அவருக்கு நீண்ட நாள் ஆகியும் இன்டர்வியூ கடிதம் வரவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த அவர் இது குறித்து வேலூர் தலைமை தபால் அலுவலக அதிகாரிகளிடம் முறையிட்டார்.
ஆனால் பூங்குழலிக்கு இன்டர்வியூ கடிதம் தபால் அலுவலகம் மூலம் அனுப்பியதாகவும், அதற்கான ஒப்புகை சீட்டில் அவர் கையெழுத்து போட்டு வாங்கியதாகவும் அதிகாரிகள் கூறினர். மேலும் அவர் இன்டர்வியூவுக்கு வராததால் அவருக்கு பதில் மிதுன் ராஜன் என்பவர் அந்த பணிக்கு நியமிக்கப்பட்டதாகவும் தெரிவித்தனர்.
இதனைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த பூங்குழலி தான் கையெழுத்து போட்ட ஒப்புகை சீட்டை வாங்கி பார்த்தபோது அதில் அவரது கையெழுத்து போலவே போலி கையெழுத்து போட்டு இருந்தது தெரிய வந்தது. இதனையடுத்து அவர் வேலூர் தாலூகா காவல் நிலையத்தில் புகார் செய்தார். அவரது புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார் தீவிர விசாரணை நடத்தினர்.
விசாரணையில் புதியதாக நியமிக்கப்பட்ட மிதுன் ராஜன் நாகநதி தபால் நிலையத்தில் தற்காலிக பணியாளராக பணிபுரிந்து வருவதும், அவர் தான் பூங்குழலிக்கு வந்த இன்டர்வியூ கடிதத்தை கொடுக்காமல், அவரே பூங்குழலி போல கையெழுத்து போட்டதோடு, அந்த பணியில் சேர்ந்ததும் தெரிய வந்தது. இதையடுத்து மிதுன் கைது செய்யப்பட்டார்.












Click it and Unblock the Notifications