கார்கில் போர் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினார் 'கர்னல்' டோணி!

இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டனான டோணியின் சிறப்பாக ஆட்டத்தை பாராட்டி, இந்திய ராணுவம் அவருக்கு கெளரவ லெப்டினன்ட் கர்னல் பதவி அளித்துள்ளது. தற்போது கிரிக்கெட் போட்டிகள் இல்லாமல் ஓய்வில் உள்ள டோணி, காஷ்மீரில் உள்ள இந்திய எல்லை பகுதிகளை பார்வையிட்டு வருகிறார்.
5 நாட்கள் கொண்ட சுற்றுப்பயணத்தின் இறுதி நாளான நேற்று உலகின் மிகவும் உயர்ந்த மற்றும் ஆபத்தான போர்க்களமான சியாச்சின் பகுதிக்கு செல்ல திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால் மோசமான வானிலை மற்றும் பாதுகாப்பு கருதி டோணியின் பயணம் ரத்து செய்யப்பட்டது.
இதையடுத்து கடந்த 1999ம் ஆண்டு போர் நடந்த கார்கில் பகுதிக்கு டோணி அழைத்து செல்லப்பட்டார். ராணுவ சீருடையில் சென்ற டோணிக்கு, பிரிகேடியர் ஷமி ராஜ் சிறப்பான வரவேற்பு அளித்தார். கார்கில் போரில் உயர்நீத்த வீரர்களின் நினைவிடத்திற்கு சென்ற டோணி அஞ்சலி செலுத்தினார். அதன்பிறகு கார்கிலை அடுத்த கக்சார் பகுதியில் உள்ள ராணுவ அதிகாரிகள், வீரர்கள் மற்றும் கிராம மக்களுடன் டோணி உரையாடினார்.
தனது சுற்றுப்பயணத்தை குறித்து டோணி கூறுகையில், இந்திய எல்லைப் பகுதியில் உள்ள கடினமான சூழ்நிலைகளை தாங்கி கொண்டு நமது வீரர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளது எனக்கு பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது என்றார்.
இது குறித்து லெப்டினன்ட் கர்னல் ராஜேஷ் காலியா கூறியதாவது
கார்கில் போர் நினைவிடத்திற்கு வந்த டோணி அஞ்சலி செலுத்தினார். இந்திய எல்லைப் பகுதியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ள ராணுவ வீரர்களுக்கு டோணி உடனான சந்திப்பு பெரும் உற்சாகத்தை அளித்துள்ளது என்றார்.
கடந்த 5 நாட்களாக காஷ்மீரில் உள்ள இந்திய எல்லை பகுதிகளை பார்வையிட்ட கேப்டன் டோணி, சுற்றுப்பயணத்தை முடித்து கொண்டு இன்று டெல்லிக்கு திரும்புகிறார்.












Click it and Unblock the Notifications