திரிணாமுல் காங்கிரஸ் எதிர்ப்பால் ஓய்வூதிய சீர்திருத்த மசோதாவில் திருத்தம் கொண்டுவருவது நிறுத்தம்
டெல்லி: திரிணாமுல் காங்கிரஸின் எதிர்ப்பால் ஓய்வூதிய சீர்திருத்த மசோதாவில் திருத்தத்தை கொண்டு வரும் முடிவை மத்திய அமைச்சரவை நிறுத்தி வைத்துள்ளது.
ஓய்வூதிய நிதியை தனியார் துறையில் முதலீடு செய்வது தொடர்பாக , "ஓய்வூதிய நிதி ஒழுங்குபடுத்தும் மற்றும் மேம்படுத்தும் ஆணைய மசோதாவை' மக்களவையில் மத்திய அரசு 2011-ம் ஆண்டு தாக்கல் செய்தது.
இந்ந நிலையில், நாடாளுமன்ற நிலைக்குழுவின் பரிந்துரையை ஏற்று, இந்த மசோதாவில் சில திருத்தங்களைச் செய்து, நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடரில் நிறைவேற்ற மத்திய அரசு நடவடிக்கை எடுத்தது.
இது தொடர்பாக வியாழக்கிழமை நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. ஆனால், ஒருமித்த கருத்து ஏற்படாததால், மசோதாவில் மாற்றம் கொண்டு வருவதை ஒத்திவைப்பது என முடிவு செய்யப்பட்டது.
இந்த மசோதாவுக்கு திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் மம்தா பானர்ஜி கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார். இந்த மசோதா குறித்து விவாதம் நடத்த வேண்டும் என்று பிரதமர் மன்மோகன் சிங்குக்கும், நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜிக்கும், திரிணாமுல் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த மத்திய ரயில்வே துறை அமைச்சர் முகுல் ராய் முன்னதாக கடிதம் எழுதியிருந்தார்.
இதைத் தொடர்ந்து மசோதாவில் சீர்திருத்தம் கொண்டு வரும் முடிவை மத்திய அமைச்சரவை நிறுத்தி வைத்திருக்கிறது.