வி.கே.சிங் பிறப்பித்த ஒழுங்கு நடவடிக்கை உத்தரவை ரத்து செய்தார் புதிய தளபதி பிக்ரம்சிங்
டெல்லி: இந்திய ராணுவத்தின் முன்னாள் தலைமைத் தளபதி வி.கே. சிங் பிறப்பித்திருந்த ஒழுங்கு நடவடிக்கை உத்தரவை புதிய தலைமைத் தளபதி பிக்ரம் சிங் ரத்து செய்து உத்தரவிட்டது பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
வி.கே. சிங் தளபதியாக இருந்தபோது, பொறுப்பிலிருந்து தவறியதாகக் கூறி வடகிழக்கு மாநிலங்களின் 3 கார்ப்ஸ் படைப்பிரிவின் தளபதி தல்பீர் சிங் சுஹாக் மீது ஒழுங்கு மற்றும் கண்காணிப்புத் தடை விதித்தார். இந்தத் தடை விதிக்கப்பட்டவர்கள் பதவி உயர்வு பெற முடியாது.
இதனால், 2014-ம் ஆண்டில் ராணுவத் தளபதியாக உயரும் அவரது வாய்ப்பு பறிபோனது. பிக்ரம் சிங் தலைமைத் தளபதியாகிவிட்டதால், காலியாக இருக்கும் கிழக்குப் படைப்பிரிவின் தளபதியாக பதவி உயர்வு பெறும் வாய்ப்பும் தல்பீர் சிங்குக்குக் கிடைக்கவில்லை. இந்த நிலையில், வி.கே. சிங் விதித்த ஒழுங்கு மற்றும் கண்காணிப்புத் தடையை ரத்து செய்து பிக்ரம் சிங் உத்தரவிட்டிருப்பதாக ராணுவ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
ராணுவ தலைமை தளபதி பிறப்பித்திருந்த ஒழுங்கு நடவடிக்கை உத்தரவை தாம் பொறுப்பேற்ற ஒருவார காலத்துக்குள் பிக்ரம்சிங் ரத்து செய்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.