குஜராத் முதல்வர் மோடியின் உட்கட்சி எதிரியான சஞ்சய் ஜோஷி பாஜகவில் இருந்து விலகல்
டெல்லி: பாரதிய ஜனதா கட்சியில் அண்மைக்காலமாக சர்ச்சையின் நாயகனாக இருந்து வரும் அக்கட்சியின் முன்னாள் தேசிய செயலர் சஞ்சய் ஜோஷி கட்சியைவிட்டு வெளியேறுவதாக அறிவித்துள்ளார். அவரது ராஜினாமாவை பாஜகவும் ஏற்றுக் கொண்டுள்ளது.
மஹாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்தவரான சஞ்சய் ஜோஷி, சங் பரிவார் அமைப்பில் தீவிர ஈடுபாட்டாளராக இருந்து வந்தார். பின்னர் குஜராத் மாநில பாஜகவில் இணைந்து பணியாற்றினார். அப்போது இவர் நரேந்திர மோடியுடன் இணைந்து பணியாற்றி இருந்தாலும் இருவருக்கும் ஏழாம் பொருத்தமே! குஜராத்தில் கேசுபாய் படேல் பதவி நீக்கம் செய்யப்பட்டு நரேந்திர மோடி முதல்வராக பதவி ஏற்ற நிலையில் சஞ்சய் ஜோஷி டெல்லியில் கட்சிப் பணியாற்றிவந்தார். பாஜகவின் தேசிய செயலாளராகவும் உயர்ந்தார்.
இருப்பினும் நரேந்திர மோடிக்கும் சஞ்சய் ஜோஷிக்கும் இடையேயான பஞ்சாயத்து ஓயவில்லை. ஒருகட்டத்தில் சீன் சிடி விவகாரத்தில் சஞ்ச்ய் ஜோஷி சிக்கிக் கொள்ள அவர் கட்சிப் பொறுப்பிலிருந்து விலக வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டது. இதற்கும் கூட மோடிதான் காரணம் என்று கூறப்பட்டிருந்தது.
இந்நிலையில் அண்மையில் நடைபெற்று முடிந்த ஐந்து மாநில சட்டப்பேரவைத் தேர்தலின் போது உத்தரப்பிரதேச மாநில தேர்தல் பொறுப்பாளராக சஞ்சய் ஜோஷியை நியமித்து அவரை மீண்டும் கட்சிப் பொறுப்பில் அமர்த்தினார் பாஜக தலைவர் நிதின் கத்காரி. இப்போது மோடியோ பாஜகவின் பிரதமர் வேட்பாளர் என்ற ரேஞ்சை எட்டிப்பிடித்து விட்டார். சஞ்சய் ஜோஷியின் நியமனத்தை மோடியால் சகிக்க முடியவில்லை. உத்தரப்பிரதேச தேர்தல் பிரச்சாரத்துக்கே மோடியும் போகவில்லை.
இந்த சூழலில் மும்பையில் பாஜகவின் தேசிய செயற்குழுக் கூட்டம் நடைபெற்றது. சஞ்சய் ஜோஷியை கட்சிப் பதவியிலிருந்து நீக்கினால் அல்லது அவர் விலகினால்தான் தேசிய செயற்குழுவுக்கு வருவேன் என்று மோடி அடம்பிடிக்க வேறு வழியே இல்லாமல் ஜோஷி ராஜினாமா செய்ய வைக்கப்பட்டார். இருப்பினும் வரும் நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலில் நாக்பூரில் போட்டியிட உள்ள நிதின் கத்காரியின் தேர்தல் பொறுப்பாளரானார்.
இதனிடையே டெல்லியிலும் சஞ்சய் ஜோஷி- நரேந்திர மோடி இடையே போஸ்டர் யுத்தம் தொடர்ந்தும் நிகழ்ந்து வந்தது. இந்த நிலையில் இன்று திடீரென பாரதிய ஜனதா கட்சியில் இருந்தே தாம் விலகுவதாக ராஜினாமா கடிதத்தை சஞ்சய் ஜோஷி அனுப்பியிருக்கிறார். இதையும் பாரதிய ஜனதா ஏற்றுக் கொண்டிருக்கிறது.
இப்போதைக்கு பாஜகவில் மோடியின் பரம எதிரியான சஞ்ய் ஜோஷி இல்லை என்பதுதான் அவரது ஆதரவாளர்களுக்கு நிம்மதி பெருமூச்சு! இது கத்காரிக்கு பெரும் பின்னடைவாகவே கருதப்படுகிறது