TNEB Free Power: 500 யூனிட்டை தாண்டினால் 200 யூனிட் இலவசம் கிடையாதா? புதிய ரூலை விளக்கிய மின்வாரியம்
சென்னை: தமிழ்நாட்டில் வீட்டு மின் நுகர்வோருக்கு 200 யூனிட் இலவச மின்சாரம் வழங்கும் புதிய திட்டத்தை குளறுபடிகள் இன்றி அமல்படுத்துவது குறித்து தமிழ்நாடு மின்சார வாரியம் புதிய சுற்றறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.. புதிய சாப்ட்வேர் அப்டேட் மற்றும் புதிய கட்டண விதிமுறைகள் குறித்து தங்களின் கீழ் பணிபுரியும் களப் பணியாளர்களுக்கு மாவட்ட பொறியாளர்கள் விளக்கங்களை அளிக்க வேண்டும் என்று இந்த சுற்றறிக்கையில் அறிவுறுத்தப்பட்டுள்ளது..
தமிழ்நாட்டில் புதிதாகப் பதவியேற்றுள்ள முதலமைச்சர் விஜய், ஏழை மற்றும் நடுத்தர மக்களின் நலனை கருத்தில் கொண்டு 200 யூனிட் மின்சாரம் இலவசம் திட்டத்திற்கான கோப்பில் முதலாவதாக கையெழுத்திட்டுள்ளார்..

மின்சார வாரியம்
இந்த புதிய திட்டத்தின் கீழ் வீடுகளில் 500 யூனிட்டுக்கு குறைவாக மின்சாரம் பயன்படுத்துவோருக்கு, அடுத்த 2 மாதங்களுக்கு 200 யூனிட் மின்சாரம் இலவசம் என்ற அறிவிப்பு வெளியிட்டதுடன், இந்த நடைமுறை கடந்த 10-ந் தேதி முதல் அமலுக்கு வருவதாக தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவித்துள்ளது.
அந்த வகையில் கடந்த காலங்களில் 210 யூனிட்டுக்கு 282 ரூபாய் வசூலிக்கப்பட்ட நிலையில் இனிமேல் 210 யூனிட்டுக்கு 47 ரூபாய் தான் வசூலிக்கப்பட உள்ளது.. அதேபோல 300 யூனிட்டுக்கு 705 ரூபாய் வசூலிக்கப்பட்ட நிலையில் இனிமேல் 470 ரூபாயும், 400 யூனிட்டுக்கு 1175 ரூபாய் வசூலிக்கப்பட்ட நிலையில் இனிமேல் 940 ரூபாயும், 500 யூனிட்டுக்கு 1805 ரூபாய் வசூலிக்கப்பட்ட நிலையில் இனிமேல் 1570 ரூபாய் தான் வசூலிக்கப்பட உள்ளது..
புதிய மின் சலுகை கட்டண சலுகை
இந்நிலையில், தமிழ்நாட்டில் வீட்டு மின் நுகர்வோருக்கான புதிய மின் கட்டண சலுகை நடைமுறைகள் குறித்து தமிழ்நாடு மின்சார வாரியம் புதிய சுற்றறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
மாநிலம் முழுவதும் உள்ள அனைத்து மாவட்ட பொறியாளர்கள் மற்றும் அதிகாரிகளுக்கு இந்த வழிகாட்டுதல்கள் அவசரமாக அனுப்பப்பட்டுள்ளது.. இரு மாதங்களுக்கு 200 யூனிட் வரை இலவச மின்சாரம் வழங்கும் புதிய திட்டத்தை அடிமட்ட அளவில் குளறுபடிகள் இன்றி செயல்படுத்துவதற்காக மின்சார வாரியம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது..
புதிய மானிய விதிகளை கணக்கிடும் வகையில் Billing Software-ல் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளதாக மின்வாரியம் தெரிவித்துள்ளது.. இந்த புதிய சாப்ட்வேர் அப்டேட் மூலம் இனி வரும் காலங்களில் நுகர்வோருக்கான மின் கட்டணம் தானியங்கி முறையில் கணக்கிடப்படும்..
200 யூனிட் மின்சாரம்
மென்பொருளில் செய்யப்பட்டுள்ள தொழில்நுட்ப மாற்றங்கள் குறித்து தங்களின் கீழ் பணிபுரியும் களப் பணியாளர்களுக்கு மாவட்ட பொறியாளர்கள் விளக்கங்களை அளிக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது..
மின்சார வாரியம் வெளியிட்டுள்ள சுற்றறிக்கையின்படி, நுகர்வோர் 2 மாதங்களுக்கு பயன்படுத்தும் ஒட்டுமொத்த மின்சார அளவை பொறுத்தே இந்த சலுகை மாறுபடும்.. 2 மாத கால இடைவெளியில் 500 யூனிட்டுகளுக்குள் மின்சாரம் பயன்படுத்தும் வீட்டு மின் நுகர்வோருக்கு மட்டுமே இந்த 200 யூனிட் இலவச மின்சார சலுகை கிடைக்கும்..
இதனால் நடுத்தர மற்றும் ஏழை எளிய குடும்பங்களுக்கு மின்சார பயன்பாட்டு செலவு கணிசமாக குறையும் என்று மின்வாரிய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன..
இலவச மின்சார சலுகை
இருந்தாலும், 2 மாத கால பயன்பாட்டில் 500 யூனிட்டுகளை தாண்டி மின்சாரம் பயன்படுத்தும் நுகர்வோருக்கு இந்த புதிய 200 யூனிட் இலவச சலுகை பொருந்தாது.. 500 யூனிட்டுகளுக்கு மேல் மின் நுகர்வு செல்லும் பட்சத்தில், அவர்களுக்கு பழைய நடைமுறையான 100 யூனிட் இலவச மின்சார திட்டம் மட்டுமே தொடர்ந்து வழங்கப்படும்..
இந்த புதிய விதிமுறைகளை கணக்கெடுப்பு பணியாளர்கள் பொதுமக்களிடம் எடுத்துரைக்க வேண்டும் என்றும், எந்தவொரு தொழில்நுட்ப கோளாறும் இன்றி இந்த திட்டத்தை மாநிலம் முழுவதும் அமல்படுத்த வேண்டும் என்றும் தலைமை அலுவலகம் உத்தரவிட்டுள்ளது..!!












Click it and Unblock the Notifications