தூத்துக்குடி டயோசீஸின் வங்கிக் கணக்கு முடக்கத்திற்கு மதுரை ஹைகோர்ட் தடை
நெல்லை: தூத்துக்குடி டயோசீஸ் அசோசியேஷனின் வங்கி கணக்கை முடக்க மத்திய அரசு பிறப்பித்த உத்தரவுக்கு உயர் நீதிமன்றம் தடை விதித்துள்ளது.
கூடங்குளம் போராட்டக்காரர்களுக்கு பண உதவி செய்ததாகக் கூறி தூத்துக்குடி டயோசீஸ் அசோசியேஷனின் வங்கிக் கணக்கை மமத்திய அரசு முடக்கியது. இதை எதிர்த்து
தூத்துக்குடி டயோசீஸ் அசோசியேஷன் தலைமை நிர்வாகி ஜெபநாதன் மதுரை உயர் நீதிமன்ற கிளையில் மனு ஒன்றா தாக்கல் செய்தார்.
அந்த மனுவில் அவர் கூறியிருப்பதாவது,
தூத்துக்குடி மறை மாவட்டம் 450 ஆண்டு பழமையானது. மறை மாவட்டம் சார்பில் பள்ளிகள், மருத்துவமனைகள், ஆதரவற்றோர் இல்லங்கள் நடத்தப்படுகின்றன. வெளிநாட்டு நிதி உதவி பெறுவதற்காக தூத்துக்குடி பரோடா வங்கியில் கணக்கு துவங்கப்பட்டது. கூடங்குளம் அணு உலை எதிர்ப்பு போராட்டத்திற்கு வெளிநாட்டு நிதியை பயன்படுத்தியாக எங்கள சங்கம் மீது புகார் கூறப்பட்டது. எங்களது வங்கி கணக்கு குறித்து விளக்கம் கேட்டு மத்திய அரசு கடந்த ஆண்டு நவம்பர் 14ம் தேதி நோட்டீஸ் அனுப்பியது. அந்த நோட்டீசுக்கு உரிய விளக்கம் அளித்தோம். மத்திய அரசு அதிகாரிகள் எங்கள் சங்க அலுவலகத்தில் ஆய்வு நடத்தினர். ஆய்வுக்கு பிறகு வரவு, செலவு சரியாக இருப்பதாக அதிகாரிகள் கூறிச் சென்றனர்.
இந்நிலையில் வங்கி கணக்கை முடக்கி பிப்ரவரி 9ம் தேதி மத்திய உள்துறை துணை செயலாளர் உத்தரவிட்டார். கூடங்குளம் அணு உலை எதிர்ப்பு போராட்டத்திற்கு நாங்கள் நிதி உதவி செய்யவில்லை. எனவே வங்கி கணக்கை முடக்கி மத்திய அரசு பிறப்பித்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என்று அவர் அதில் தெரிவித்துள்ளார்.
இந்த மனு நீதிபதி வெங்கட்ராமன் முன்பு விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த அவர் வங்கி கணக்கு முடக்கத்திற்கு இடைக்கால தடைவிதித்து உத்தரவிட்டார்.