அங்கம்மாள் காலனி குடிசை எரிப்பு வழக்கில் வீரபாண்டி ஆறுமுகம் ஜாமீன் மனு தள்ளுபடி!
சேலம்: அங்கம்மாள் காலனி குடிசை எரிப்பு வழக்கில் திமுக முன்னாள் அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகத்தின் ஜாமீன் மனுவை சேலம் முதன்மை நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.
சேலம் புதிய பஸ் நிலையம் அருகில் அங்கம்மாள் காலனி உள்ளது. இங்கு குடியிருந்த மக்களை அங்கிருந்து வெளியேற்ற திமுக முன்னாள் அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம் தரப்பு கடந்த திமுக ஆட்சியில் கடும் முயற்சி செய்து, அங்கிருந்த குடிசைகளுக்கு நள்ளிரவில் சிலர் தீ வைத்து விட்டு தப்பிவிட்டதாக கூறப்படுகின்றது.
இதனால் பாதிக்கப்பட்ட மக்கள் காவல் நிலையத்திலும், கலெக்டர் அலுவலகத்திலும் புகார் அளித்தனர். ஆனால் குற்றவாளிகளை கைது செய்ய போலீசார் தயக்கம் காட்டினர். இந்த நிலையில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு அதிமுக ஆட்சி அமைந்தது. தற்போது மீண்டும் சேலம் அங்கம்மாள் காலனியில் உள்ள குடிசைகளுக்கு கடந்த ஜூன் 2ம் தேதி மர்மநபர்களால் தீவைக்கப்பட்டது.
இதனையடுத்து கணேசன் என்பவர் முன்னாள் திமுக அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம் மீது புகார் கொடுத்தார். அதன்பேரில் வீரபாண்டி ஆறுமுகம் உள்பட 30 பேர் மீது பள்ளப்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்தனர். இவ்வழக்கில் வீரபாண்டி ஆறுமுகம் உட்பட 19 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ளனர்.
இவ்வழக்கு தொடர்பாக முன்னாள் அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம் சேலம் முதன்மை நீதிமன்றத்தில் ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்தார். இதுபோல ஜாமீன் கேட்டு இவ்வழக்கில் கைதான பட்டறை முருகேசன், கறிக்கடை பெருமாள், கனகராஜ், ஜவகர், கருமயில் என்ற குணாளன் ஆகியோர் சார்பிலும் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டது.
மேலும் இவ்வழக்கு தொடர்பாக தேடப்படும் வக்கீல் மூர்த்தி, ரமேஷ், அழகாபுரம் முரளி, ஆட்டோ மணி, கூழ் மகேந்திரன் ஆகியோர் சார்பில் வக்கீல்கள் பொன்னுசாமி, மணிவாசகம், இமயவரம்பன் ஆகியோர் முன்ஜாமீன் மனு தாக்கல் செய்தனர்.
இந்த நிலையில் நேற்று 11 ஜாமீன் மனுக்களும் விசாரணைக்கு எடுக்கப்பட்டது. விசாரணைக்கு பிறகு வீரபாண்டி ஆறுமுகம் உட்பட 5 பேரின் ஜாமீன் மனுக்களை தள்ளுபடி செய்து நீதிபதி பாஸ்கரன் உத்தரவி்ட்டார்.