புதுக்கோட்டையில் அதிமுக வேட்பாளரை ஆதரித்து முதல்வர் இன்று தேர்தல் பிரச்சாரம்!
புதுக்கோட்டைத் தொகுதியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி எம்.எல்.ஏ.வாக இருந்த முத்துக்குமரன் விபத்தில் மரணமடைந்தார். இதனையடுத்து அங்கு வரும் 12ம் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது.
அதிமுக சார்பில் கார்த்திக் தொண்டமான், தேமுதிக சார்பில் ஜாகீர் உசேன், ஐஜேகே சார்பில் சீனிவாசன் மற்றும் சுயேச்சைகள் என்று மொத்தம் 20 பேர் போட்டியிடுகின்றனர்.
ஆனால் முக்கிய கட்சிகளான திமுக, மதிமுக, பாஜ, இந்திய கம்யூனிஸ்ட், பாமக உள்ளிட்ட கட்சிகள் போட்டியிடவில்லை. இதனால் புதுக்கோட்டை தொகுதியில் ஆளும் கட்சியான அதிமுக மற்றும் எதிர்கட்சியான தேமுதிக இடையே நேரடி போட்டி ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில் அதிமுக வேட்பாளர் கார்த்திக் தொண்டைமானை ஆதரித்து, அதிமுக பொதுச் செயலாளரும், முதல்வருமான ஜெயலலிதா புதுக்கோட்டை தொகுதியில் பல்வேறு பகுதியில் தீவிர பிரச்சாரம் மேற்கொள்கின்றார்.
முடிவில் டி.வி.எஸ். கார்னரில் உரையாற்றுகின்றார். அதனை முடித்துக் கொண்டு அருகில் உள்ள ஆயுதப்படை மைதானத்தில் அமைக்கப்பட்டுள்ள ஹெலிகாப்டர் தளத்திலிருந்து முதல்வர் ஜெயலலிதா திருச்சி செல்கிறார். அங்கிருந்து விமானம் மூலம் சென்னை செல்கின்றார். முதல்வர் ஜெயலலிதா வருகையை முன்னிட்டு புதுக்கோட்டையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
தேர்தல் பிரசாரம் நாளை மாலை 5 மணியுடன் முடிவடைகிறது. வரும் 12ம் தேதி காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை வாக்குப் பதிவு நடைபெறுகிறது. வாக்கு எண்ணிக்கை வரும் 15ம் தேதி நடைபெறுகிறது.