கூடங்குளம்: பேரிடர் மேலாண்மைப் பயிற்சி 'ஓவர்'-விரைவில் மின் உற்பத்தி!
கூடங்குளம்: கூடங்குளம் அணுமின்நிலையத்தில் கதிர்வீச்சு அபாயம் ஏற்பட்டால் அதில் இருந்து எவ்வாறு பாதுகாத்துக் கொள்வது என்பது குறித்த பேரிடர் மேலாண்மை பயிற்சி நிறைவடைந்துள்ளது.
இதனையடுத்து அணு உலைகளில் யுரேனியம் நிரப்பும் பணி நிறைவடைந்த உடன் விரைவில் மின் உற்பத்தி தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தியா ரஷ்யா கூட்டு முயற்சியுடன் கூடங்குளத்தில் 1,000 மெகாவாட் உற்பத்தி திறனுள்ள 2 அணு உலைகள் ரூ.13,500 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ளன. முதல் அணு உலையின் மூலம் மின் உற்பத்தியை தொடங்க அனைத்து வகையிலும் கூடங்குளம் அணுமின் நிலையம் தயாராகி விட்டது. மின் உற்பத்தியை தொடங்கும் முன்பு பேரிடர் மேலாண்மை பயிற்சி அளிக்க வேண்டும். அப்போதுதான் யுரேனியம் நிரப்புவதற்கு இந்திய அணுசக்தி ஒழுங்கு முறை ஆணையம் அனுமதி வழங்கும்.
இதனையடுத்து கூடங்குளம் அணுமின் நிலையத்தில் இருந்து 7 கி.மீ தூரத்தில் உள்ள நக்கனேரி கிராமத்தில் பேரிடர் மேலாண்மை பயிற்சி நடத்தப்பட்டது. இதற்காக கூடங்குளம் அணுமின் நிலையத்தில் அவசர நிலை அறிவிக்கப்பட்டது. அப்போது மக்களை எப்படி பாதுகாப்பது, மக்களை எப்படி வெளியேற்றுவது, என்னென்ன நடவடிக்கைகள் எடுப்பது என்பது குறித்து நக்கநேரியில் பேரிடர் மேலாண்மை பயிற்சி நடைபெற்றது.
இதற்காக ஆம்புலன்ஸ் வாகனமும் வரவழைக்கப்பட்டது. பேரிடர் மேலாண்மை பயிற்சி நிறைவடைந்துள்ள நிலையில் அணு உலைகளில் யுரேனியம் நிரப்பினால் மின் உற்பத்தி விரைவில் தொடங்கி விடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பொய்யான பயிற்சி-உதயக்குமார் கண்டனம்
இதனிடையே இது பொய்யான பேரிடர் மேலாண்மை பயிற்சி என்று கூடங்குளம் அணுஉலை எதிர்பாளர்கள் தெரிவித்துள்ளனர். இது குறித்து கருத்து தெரிவித்துள்ள போராட்டக்குழு ஒருங்கிணைப்பாளர் உதயகுமார், பேரிடர் மேலாண்மை பயிற்சி நடத்தப்படுவது குறித்து எந்தவித முன் அறிவிப்பும் கொடுக்கப்படவில்லை.
நக்கனேரி கிராமத்தில் 100 பேர் மட்டுமே இருந்துள்ளனர். அதுவும் படிக்காத பாமர மக்கள்தான் இருந்துள்ளனர். இவர்கள் நடத்திய பேரிடர் மேலாண்மை பயிற்சி பற்றி அவர்களுக்கு எதுவும் தெரிந்து இருக்க வாய்ப்பில்லை. ஆகவே இந்த பயிற்சியை நாங்கள் எதிர்க்கிறோம். ஏற்றுக்கொள்ள மாட்டோம்' என்றார்.
பெரிய கவலையில் இலங்கை:
இந்த நிலையில் கூடங்குளம் அணு உலையில் விபத்து ஏற்பட்டால் அது இலங்கையையும் பாதிக்கும் என்று இலங்கையில் உள்ள சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.
இதையடுத்து இந்தியாவுடன் அணுவிபத்து பேரிடர் மேலாண்மை தொடர்பாக உடன்பாடு செய்து கொள்ள இலங்கை விரும்புகிறது. இதன் ஒருபகுதியாகவே இந்திய அதிகாரிகளுடன் இலங்கை அதிகாரிகள் பேச்சு நடத்த உள்ளனர். தில்லியில் நடைபெற உள்ள இந்த சந்திப்பின்போது இரு நாட்டு அதிகாரிகளும் இருதரப்பு உடன்பாடு தொடர்பாக ஆலோசனை நடத்துவார்கள் என்று இலங்கையின் அணுசக்தி ஆணைய தலைவர் ரஞ்சித் விஜயவர்த்தன தெரிவித்துள்ளார்.