குடியரசுத் தலைவர் வேட்பாளரை நாளை அறிவிக்கும் காங்கிரஸ்
டெல்லி: குடியரசுத் தலைவர் வேட்பாளர் யார் என்பதை காங்கிரஸ் இன்று மாலை அல்லது நாளை அறிவிக்கும் என்று கூறப்படுகிறது.
குடியரசுத் தலைவர் வேட்பாளராக மத்திய நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜியை அறிவிக்க காங்கிரஸ் முடிவு செய்திருந்து. ஆனால் ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசில் அங்கம் வகிக்கும் திரிணாமூல் காங்கிரஸ் தலைவரும், மேற்கு வங்க முதல்வருமான மமதா பானர்ஜி பிரணாபை ஆதரிக்க மறுத்துவிட்டார். மேலும் மமதாவும், சமாஜ்வாடி கட்சி தலைவர் முலாயம் சிங் யாதவும் சேர்ந்து குடியரசுத் தலைவர் வேட்பாளராக முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம், பிரதமர் மன்மோகன் சிங், மூத்த இடதுசாரிக் கட்சி தலைவர் சோம்நாத் சாட்டர்ஜி ஆகியோரின் பெயரை பரிந்துரைத்தனர். ஆனால் அவர்கள் பரிந்துரையை காங்கிரஸ் ஏற்றுக் கொள்ளவில்லை.
இந்நிலையில் குடியரசுத் தலவைர் வேட்பாளர் குறித்து முடிவு செய்ய காங்கிரஸ் முக்கிய நிர்வாகிகள் கூட்டம் இன்று மாலை அல்லது நாளை நடக்கிறது. அந்த கூட்டத்திற்கு பிறகு வேட்பாளர் அறிவிக்க்கப்படுவார்.
குடியரசுத் தலைவர் வேட்பாளரை காங்கிரஸ் விரைவில் அறிவிக்கும் என்று பிரணாப் முகர்ஜி தெரிவி்த்துள்ளார். முன்னதாக அவர் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியை அவரது இல்லத்தில் சந்தித்து சுமார் 30 நிமிடங்கள் பேசினார் என்பது குறிப்பிடத்தக்கது.