பிள்ளைகளை ஸ்கூலில் சேர்ப்பது தொடர்பாக 2 பிரிவினர் மோதல்: நாட்டு வெடிகுண்டு வீச்சு
நெல்லை: மாணவர்களை பள்ளியில் சேர்க்கும விவகாரம் தொடர்பாக ஏற்பட்ட மோதலையடுத்து நேற்று கூத்தங்குளியில் நாட்டு வெடிகுண்டுகள் வீசப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
நெல்லை மாவட்டம் ராதாபுரம் தாலுகாவில் உள்ள கூத்தங்குளி கிராமத்தி்ல் மீனவர்கள் அதிக அளவில் வசித்து வருகின்றனர். கூடங்குளம் அணு உலைக்கு எதிரான போராட்டங்களுக்கு முன்னரே இக்கிராமத்தில் இரு தரப்பினர் இடையே முன்விரோதம் இருந்து வந்தது. இருதரப்பும் அவ்வப்போது மோதிக்கொள்வதும் உண்டு. இந்நிலையில் சில தினங்களுக்கு முன்பு கிராமத்தில் உள்ள மாணவ, மாணவிகளை அங்குள்ள ஆர்.சி. பள்ளியில் சேர்ப்பது தொடர்பான ஆலோசனை நடநத்து.
இதில் ஒரு தரப்பினர் தங்கள் குழந்தைகளை திசையன்விளை, வள்ளியூர் பகுதிகளில் உள்ள மெட்ரிக் பள்ளிகளில் சேர்க்க உள்ளதாக தெரிவித்தனர். குழந்தைகள் நகரத்திற்கு செல்லும்போது கிராமத்தில் உள்ள ஆர்.சி. பள்ளியில் படிக்க ஆள் இருக்காது என கூறி மற்றொரு தரப்பினர் ஆட்சேபம் தெரிவித்தனர். இதில் ஏற்பட்ட வாக்குவாதம் முற்றியதால் கூட்டத்தில் எவ்வித முடிவும் எடுக்கப்படவில்லை. இந்நிலையில் நேற்று அதிகாலை 4 மணிக்கு கூத்தங்குளி சாலையில் ஒரு தரப்பினர் நாட்டு வெடிகுண்டுகளை வீசினர்.
பயங்கர சத்தத்துடன் குண்டுகள் வெடித்ததால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. அதிகாலை நேரம் என்பதால் அதிர்ஷ்டவசமாக யாருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை. வெடிகுண்டு வீச்சு சம்பவத்தை தொடர்ந்து அப்பகுதியில் யாரும் கடலுக்கு மீன்பிடிக்க செல்லவில்லை. ஊருக்கு வெளியே போலீஸ் வாகனங்களும், தீயணைப்பு துறை வாகனங்களும் நிறுத்தப்பட்டு அசம்பாதவிதம் ஏதும் நிகழாத வகையில் கண்காணிப்பு பணி நடந்து வருகிறது.