மீண்டும் வறுமை திரும்பும் அபாயம்.. கடந்த 10 ஆண்டு கால சாதனைகள் வீணாகும்.. பிரதமர் மோடி வார்னிங்!
டெல்லி: முதலில் கொரோனா, பின்னர் போர் இப்போது எரிசக்தி தட்டுப்பாடு என இந்த தசாப்தமே நெருக்கடிகளால் சூழ்ந்து உள்ளதாக பிரதமர் மோடி வேதனை தெரிவித்துள்ளார். இந்த நிலை நீடித்தால் உலகின் பெரும் பகுதியினர் மீண்டும் வறுமையை நோக்கி செல்வார்கள் என்றும், கடந்த 10 ஆண்டு கால சாதனைகள் துடைத்தெறியப்படும் என்றும் வார்னிங் கொடுத்துள்ளார்.
நெதர்லாந்தின் 'தி ஹேக்' (The Hague) நகரில் வாழும் இந்திய வம்சாவளியினரிடையே உரையாற்றிய பிரதமர் மோடி, தற்போது உலகம் ஒரே நேரத்தில் பல நெருக்கடிகளை எதிர்கொண்டு வருவதாகக் குறிப்பிட்டார். இதுதொடர்பாக பிரதமர் மோடி பேசுகையில், இன்று மனிதகுலம் பல சவால்களைச் சந்தித்து வருகிறது. முதலில் கொரோனா வந்தது, பின்னர் போர்கள் தொடங்கின.

இப்போது கடுமையான எரிசக்தி நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இந்த தசாப்தம் உலகிற்கு பேரழிவுகளின் தசாப்தமாக மாறி வருகிறது. இந்த சூழ்நிலை விரைவில் மாறாவிட்டால், கடந்த தசாப்தங்களில் நாம் பெற்ற சாதனைகள் அனைத்தும் வீணாகிவிடும். உலக மக்கள் தொகையில் பெரும் பகுதியினர் மீண்டும் வறுமையில் வீழக்கூடும் என்று தெரிவித்தார்.
தொடர்ந்து, இத்தகைய உலகளாவிய சவால்களுக்கு மத்தியிலும், இந்தியா அடைந்துள்ள தொழில்நுட்ப மற்றும் டிஜிட்டல் உள்கட்டமைப்பு வளர்ச்சியைப் பிரதமர் பெருமையுடன் சுட்டிக்காட்டினார். கடந்த சில ஆண்டுகளில், பூமிக்கும் சந்திரனுக்கும் இடைப்பட்ட தூரத்தை விட 11 மடங்கு அதிகமான ஆப்டிகல் ஃபைபர் கேபிள்களை இந்தியா அமைத்துள்ளது.
ஒரு தசாப்தத்திற்கு முன்பு நாம் மொபைல் போன்களை இறக்குமதி செய்தோம்; ஆனால் இன்று இந்தியா உலகின் இரண்டாவது பெரிய மொபைல் போன் உற்பத்தி நாடாக உருவெடுத்துள்ளது. இந்தியாவின் 'டிஜிட்டல் பொது உள்கட்டமைப்பு' இன்று உலகளவில் பேசப்பட்டு வருகிறது. இந்தியா ஒரு புதிய கண்டுபிடிப்புகளின் மையமாக மாறியுள்ளது.
இன்றைய இந்தியாவின் இளைஞர்கள் வானத்தைத் தொட விரும்புகிறார்கள். 12 ஆண்டுகளுக்கு முன்பு இந்தியாவில் 500க்கும் குறைவான ஸ்டார்ட்-அப்களே இருந்தன. ஆனால் இன்று அந்த எண்ணிக்கை 2 லட்சத்திற்கும் அதிகமாக உயர்ந்துள்ளது. 2014-ல் வெறும் 4 'யுனிகார்ன்' நிறுவனங்களே இருந்த நிலையில், இன்று அதன் எண்ணிக்கை சுமார் 1.25 லட்சமாக அதிகரித்துள்ளது.
செமிகண்டக்டர் (Semiconductor) உற்பத்தித் துறையிலும் இந்தியா வேகமாக முன்னேறி வருகிறது. தற்போது இந்தியாவில் 12 செமிகண்டக்டர் ஆலைகள் செயல்பட்டு வருவதாகவும், விரைவில் சிப்கள் இந்தியாவிலேயே வடிவமைக்கப்பட்டு இந்தியாவிலேயே தயாரிக்கப்படும் என்றும் பிரதமர் மோடி உறுதியளித்தார்.












Click it and Unblock the Notifications