இலவச திருமணங்கள்: கின்னஸில் இடம் பெறப்போகும் முதல்வர் ஜெயலலிதா
தமிழக இந்து அறநிலையத்துறை சார்பில் வரும் 18ம் தேதி 1,006 ஜோடிகளுக்கு இலவசமாக திருமணம் நடத்தி வைக்க முடிவு செய்யப்பட்டது. இதற்காக சென்னை அருகே உள்ள திருவேற்காடு கருமாரியம்மன் கோவில் அருகே 9 ஏக்கர் பரபரப்பளவில் பிரமாண்டமான பந்தல் அமைக்கப்பட்டு வருகிறது. இங்கு 1,006 ஜோடிகளுக்கு முதல்வர் ஜெயலலிதா இலவசமாக திருமணத்தை நடத்தி வைக்கிறார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி ஜூன் 18ம் தேதி (திங்கள்) காலை 9.30 மணி முதல் 10.29 மணிக்குள் இத்திருமண நிகழ்ச்சி நடைபெறுகிறது.
திருமண ஜோடி ஒவ்வொருவருக்கும் தலா ரூ.10,000 மதிப்புள்ள வெள்ளி மெட்டி, புடவை, வேஷ்டி, துண்டு, சட்டை, பித்தளை காமாட்சி விளக்கு, எவர்சில்வர் குங்கம சிமிழ், குடம், சாப்பாட்டு தட்டு, அன்னக்கரண்டி, பாய், தலையணை உட்பட 29 பொருட்கள் சீர்வரிசையாக வழங்கப்பட உள்ளது.
கடந்த 2002ம் ஆண்டு 1,008 ஜோடிகளுக்கும், 2003ம் ஆண்டு 1,053 ஜோடிகளுக்கும், 2001ம் ஆண்டு முதல் 2006ம் ஆண்டு வரை 2500-க்கும் மேற்பட்ட ஜோடிகளுக்கும், முதல்வர் ஜெயலலிதா இலவச திருமணங்களை நடத்தி வைத்துள்ளார்.
உலகிலேயே அதிக இலவச திருமணங்களை நடத்தி வைத்தவர் என்ற பெருமையை தமிழக முதல்வர் ஜெயலலிதா பெற்றுள்ளார். இதனால் அவர் கின்னஸ் புத்தகத்தில் இடம் பெறப் போகின்றார்.