தவெகவுக்கு எதிராக திமுக, அதிமுக கூட்டணி முயற்சி.. அருண்ராஜ் பரபரப்பு குற்றச்சாட்டு
சென்னை: தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் தவெக ஆட்சியமைக்கும் சூழல் உருவாகியுள்ள நிலையில், அரசியல் பரபரப்பு உச்சத்தை எட்டியுள்ளது. இந்த சூழலில், தவெகவுக்கு எதிராக திமுகவும், அதிமுகவும் சேர முயற்சி நடைபெறுகிறது என்று அருண்ராஜ் தெரிவித்துள்ளார்.
தமிழக 234 உறுப்பினர்களைக் கொண்ட தமிழக சட்டப்பேரவையில் ஆட்சியமைக்க 118 எம்.எல்.ஏக்களின் ஆதரவு தேவைப்படுகிறது. இந்த தேர்தலில் தவெக 108 தொகுதிகளில் வெற்றி பெற்று மிகப்பெரிய கட்சியாக உருவெடுத்துள்ளது. இருப்பினும், ஆட்சியை அமைக்க மேலும் 11 உறுப்பினர்களின் ஆதரவு அவசியமாகியுள்ளது.

இந்த சூழலில், திமுக கூட்டணியில் போட்டியிட்ட காங்கிரஸ் கட்சி தனது 5 எம்.எல்.ஏக்களின் ஆதரவை தவெகவுக்கு வழங்குவதாக நேற்று அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. இதனால் தவெக அணியின் பலம் மேலும் அதிகரித்துள்ளது.
அதேநேரத்தில், விடுதலை சிறுத்தைகள் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஆகியவற்றின் ஆதரவும் முக்கியமானதாக பார்க்கப்படுகிறது. இந்த மூன்று கட்சிகளுக்கும் தலா 2 உறுப்பினர்கள் உள்ளதால், அவர்களின் முடிவு தமிழக அரசியலில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என கூறப்படுகிறது.
இதற்காக தவெக சார்பில் அந்த கட்சிகளிடம் அதிகாரப்பூர்வமாக ஆதரவு கோரி கடிதம் அனுப்பப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தவெக தலைவர் விஜய் ஆட்சியமைக்க ஆளுநர் இதுவரை அழைக்காமல் உள்ளார். இதற்கு திமக, அதிமுக, சிபிஎம் என பல்வேறு கட்சியினரும் கண்டனத்தை தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், தவெகவுக்கு எதிராக திமுகவும், அதிமுகவும் சேர முயற்சி நடைபெறுகிறது என்று அருண்ராஜ் தெரிவித்துள்ளார். இதுகுறித்து தவெக அருண்ராஜ் செய்தியாளர்களிடம் கூறியதாவது: தமிழக மக்கள் இதை எல்லாம் நன்றாகப் பார்த்துக் கொண்டுதான் இருக்கின்றார்கள். ஓபிஎஸ்-ஐ ஏன் எடப்பாடி பழனிசாமி வெளியே அனுப்பினார்கள். திமுகவுடன் உறவு வைத்திருப்பதாகத் தான் சொல்கிறார்கள். இப்போது ஏன் இவ்வாறு செய்து கொண்டிருக்கிறார் என்று ஊருக்கே தெரியும்.
தமிழக மக்கள் இந்த நிகழ்வை கண்டிப்பாக கவனிக்க வேண்டும். சிந்தித்துப் பார்க்க வேண்டும். மற்ற தொகுதியில் ஜெயித்தவர்களுக்கு ஓட்டுப் போட்ட மக்கள் இவர்களுக்கா ஓட்டு போட்டோமா என்று சிந்திக்க வேண்டும். எந்தளவிற்கு மக்களுடைய தீர்ப்பை நீர்த்துப் போக செய்ய திட்டமிட்டிருக்கிறார்கள். இந்த திட்டத்தை சிலர் தடுத்திருக்கலாம், ஆனால், திமுகவும் அதிமுகவும் முயற்சி செய்தது உண்மை தான். அது முற்றிலும் மக்களுக்கு எதிரான செயல். மக்கள் கண்டிப்பாக பதிலடி கொடுப்பார்கள் என்றார்.












Click it and Unblock the Notifications