போலியோ சொட்டு மருந்து விஷம், இஸ்லாத்திற்கு எதிரானது: இப்படியும் ஒரு பிரச்சாரம்!
இஸ்லாமாபாத்: போலியோ சொட்டு மருந்து கொடுப்பது இஸ்லாத்திற்கு எதிரானது என்றும், சொட்டு மருந்து கொடுக்க வருபவர்களுக்கு எதிராக புனிதப்போர் நடத்த வேண்டும் என்றும் பாகிஸ்தானில் ஒரு பள்ளிவாசல் அறிவித்துள்ளது.
இது குறித்து தி எக்ஸ்பிரஸ் ட்ரிப்யூன் வெளியிட்டுள்ள செய்தியில் கூறியிருப்பதாவது,
பாகிஸ்தானின் முசாபர்கார் பகுதியில் உள்ள கான் பர் பக்கா ஷெருக்கு உள்ளூரைச் சேர்ந்த போலியோ சொட்டு மருந்து கொடுக்கும் குழு சென்றது. அது அங்குள்ள பொதுமக்களை அணுகி குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து கொடுக்க ஒத்துழைப்பு அளிக்குமாறு கேட்டு்க கொண்டது.
இது குறித்து தகவல் அறிந்த உள்ளூர் மத தலைவரான மௌலவி இப்ராஹிம் சிஸ்தி அப்பகுதியில் உள்ள பெரிய பள்ளிவாசலுக்கு சென்று போலியோ சொட்டு மருந்து விஷம் என்றும், அதை குழந்தைகளுக்கு கொடுப்பது இஸ்லாத்திற்கு எதிரானது என்றும் அறிவித்தார். மேலும் போலியோ சொட்டு மருந்து கொடுக்கும் குழு யாரையாவது வற்புறுத்தி மருந்து கொடுத்தால் அவர்களுக்கு எதிராக புனிதப் போர் நடத்துவதைத் தவிர வேறு வழியில்லை என்றும் அறிவித்தார்.
இதையடுத்து போலியோ சொட்டு மருந்து கொடுக்கும் குழுவினர் யாருக்கும் மருந்து கொடுக்காமலேயே முசாபர்கார் நகருக்கு திரும்பினர். அந்த குழுவினர் இந்த விவகாரம் குறித்து மாவட்ட சுகாதாரத் துறை தலைமை அதிகாரிக்கு தெரிவித்தனர். அவர் உடனே மாவட்ட ஒருங்கிணைப்பு அதிகாரிக்கு தகவல் தெரிவித்தார்.
போலியோ மருந்து கொடுத்து மக்களை மலட்டுத் தன்மை உடையவர்களாக்க மேற்கத்திய நாடுகள் சதித்திட்டம் தீட்டியுள்ளதாகக் கூறி மதத் தலைவர் தங்களை நம்ப வைத்துவிட்டதாக உள்ளூர்வாசிகள் தெரிவித்தனர்.
பின்னர் போலீஸ் துணையுடன் போலியோ சொட்டு மருந்து கொடுக்கும் குழு கான் பர் பக்கா ஷெருக்கு மீண்டும் சென்றது.












Click it and Unblock the Notifications