குடியரசுத் தலைவர் தேர்தலில் கலாம் போட்டியிடுகிறார் -மமதா அறிவிப்பு
குடியரசுத் தலைவர் வேட்பாளர் தொடர்பான மோதல் கிளைமேக்ஸை எட்டி வருவதாக தெரிகிறது. பிரணாப் முகர்ஜியின் பெயரை அறிவிக்க காங்கிரஸ் கிட்டத்தட்ட தயாராகி விட்டது. அதேபோல மமதா பானர்ஜியும் அப்துல் கலாமை நிறுத்துவதில் உறுதியாக இருக்கிறார்.
இந்த நிலையில் குடியரசுத் தலைவர் தேர்தலில் போட்டியிட கலாம் சம்மதம் தெரிவித்திருப்பதாக மமதா கூறியுள்ளார்.இதுகுறித்து இன்று அவர் கூறுகையில், குடியரசுத் தலைவர் தேர்தலில் நிச்சயம் அப்துல் கலாம் போட்டியிடுவார். அதற்கு அவர் சம்மதம் தெரிவித்துள்ளார். அவருக்கு எனது அட்வான்ஸ் வாழ்த்துகளைக் கூறிக் கொள்கிறேன்.
அப்துல் கலாமை நிறுத்துவது தொடர்பாக எனக்கும், முலாயம் சிங் யாதவுக்கும் கருத்து வேறுபாடு எதுவும் இல்லை. அவர் என்னுடன்தான் இருக்கிறார்.
அப்துல் கலாமை ஆதரிக்குமாறு அனைத்துக் கட்சிகளுக்கும் கோரிக்கை விடுப்போம். இதுதொடர்பாக காங்கிரஸின் பதிலுக்குக் காத்திருக்கிறோம் என்றார்.
அதேசமயம், பிரணாப் முகர்ஜியை ஆதரிப்பது தொடர்பாக முலாயம் சிங் யாதவுடன் காங்கிரஸ் கட்சிக்கு உடன்பாடு ஏற்பட்டு விட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனால் மமதாவின் கை சற்றே தாழும் என்று தோன்றுகிறது.