ஜனாதிபதி தேர்தல்: மம்தாவிடமிருந்து முலாயமை 'தாஜா' செய்து பிரித்த காங்கிரஸ்!
டெல்லி: ஜனாதிபதி தேர்தல் வேட்பாளர் விஷயத்தில் மம்தா பானர்ஜியுடன் சேர்ந்து கொண்டு காங்கிரசுக்கு அதிர்ச்சி கொடுத்த முலாயம் சிங் யாதவுடன் காங்கிரஸ் கட்சி தொடர்ந்து பேச்சு நடத்தி வருகிறது. இதையடுத்து காங்கிரஸ் வேட்பாளருக்கு ஆதரவு தர முலாயம் சிங் முன் வந்துள்ளதாக லேட்டஸ்ட் தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஆரம்பத்தில் இருந்தே அப்துல் கலாம் தான் ஜனாதிபதியாக வேண்டும் என்று கூறி வருபவர் முலாயம் சிங். ஆனால், பின்னர் காங்கிரஸ் எடுக்கும் முடிவை ஆதரிப்பது போல கருத்துக்களைத் தெரிவித்து வந்தார்.
இந் நிலையில் திடீரென மம்தா பானர்ஜியுடன் சேர்ந்து கொண்டு அப்துல் கலாம், மன்மோகன் சிங், சோம்நாத் சாட்டர்ஜி ஆகிய மூவரில் ஒருவரைத் தான் ஆதரிப்போம் என்று அறிவித்து காங்கிரஸை கலக்கத்தில் தள்ளினார்.
இதையடுத்து மம்தாவை ஒதுக்கிவிட்டு முலாயம் சிங்குடன் காங்கிரஸ் மறைமுகமாக பேச்சு நடத்தி வருகிறது. மூத்த சமாஜ்வாடி கட்சித் தலைவரான நரேஷ் அகர்வால் மூலமாக முலாயம் சிங்குடன் காங்கிரஸ் தலைவர்கள் திக்விஜய் சிங், ராஜிவ் சுக்லா ஆகியோர் இந்தப் பேச்சுவார்த்தைகளை நடத்தி வருகின்றனர்.
இதைத் தொடர்ந்து காங்கிரஸ் வேட்பாளரை ஆதரிக்க முலாயம் முன் வந்துள்ளதாகத் தெரிகிறது. ஆனால், தன்னை காங்கிரஸ் மதிக்கவில்லை என்று முலாயம் வருத்தம் தெரிவித்ததாகவும் கூறப்படுகிறது.
ஒரு எம்.பி., 2 எம்.பி.க்கள் உள்ள கட்சிகளையெல்லாம் அழைத்து ஆதரவு கேட்கும் சோனியா காந்தி, மத்திய அரசுக்கு நெருக்கடி ஏற்படும்போதெல்லாம் ஓடோடிச்சென்று ஆதரித்த தன்னை அழைத்துப் பேசவில்லை என்று கடுப்பாகியுள்ள முலாயமை தாஜா செய்யும் வேலைகள் நடந்து வருகின்றன.
மம்தாவுடன் அவர் கைகோர்த்துவிடாமல் இருக்க காங்கிரஸ் எல்லா முயற்சிகளையும் செய்து வருகிறது.