சோனியா சொல்லும் ஜனாதிபதி வேட்பாளரை ஏற்றுக் கொள்வோம்: கருணாநிதி
மேலும் ஜனாதிபதி தேர்தல் வேட்பாளர் தேர்வில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி முடிவு செய்யும் வேட்பாளரையே திமுக ஏற்கும், அதில் எந்த மாற்றமும் இல்லை என்றும் கருணாநிதி கூறினார்.
இது குறித்து இன்று நிருபர்களுக்கு அவர் அளித்த பேட்டி:
கேள்வி: புதுக்கோட்டை இடைத்தேர்தலில் அதிமுக வேட்பாளர் முன்னணியில் இருக்கிறாரே?
பதில்: நான் அதைப்பற்றிக் கவலைப்படவில்லை.
கேள்வி: ஆந்திராவில் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் 15 இடங்களில் முன்னணியில் இருப்பதாக செய்தி வந்திருக்கிறதே?
பதில்: அது ஏற்கனவே எதிர்பார்த்தது தான்.
கேள்வி: தமிழ்நாட்டில் நடைபெற்ற இடைத்தேர்தலில் ஆளுங் கட்சி வெற்றி பெறுவதற்கும், மற்ற மாநிலங்களில் ஆளுங்கட்சி தோற்பதற்கும் என்ன காரணம்?
பதில்: வெற்றி தோல்விதான் காரணம்.
கேள்வி: சமீபத்தில் நடந்த 5 மாநில தேர்தல்களிலும், தற்போது ஆந்திர இடைத் தேர்தலிலும் காங்கிரஸ் தோல்வி அடைந்துள்ளது. வரவிருக்கின்ற நாடாளுமன்றத் தேர்தலில் இந்தத் தோல்வி எதிரொலிக்குமா?
பதில்: வெற்றி தோல்வியை எதிரொலிக்க முடியாது.
கேள்வி: தே.மு.தி.க. புதுக்கோட்டையில் திமுக ஆதரவுடன் போட்டியிட்டிருந்தால் நன்றாக இருந்திருக்குமே?
பதில்: நான் அதைப்பற்றிப் பேசத் தயாராக இல்லை.
கேள்வி: அதிமுக முன்பு தனது வேட்பாளராக சங்மா பெயரைக் கூறியது. ஆனால் நேற்று அத்வானியைச் சந்தித்திருக்கிறார் முதல்வர் ஜெயலலிதா. இதையடுத்து சங்மாவை தற்போது அதிமுக கைவிட்டு விட்டதாக தகவல் சொல்லப்படுகிறதே?
பதில்: தகவல்களுக்கெல்லாம் பதில் சொல்ல முடியாது.
கேள்வி: அப்துல் கலாம் தான் வேட்பாளர் என்று மம்தா பானர்ஜி சொல்லியிருக்கிறாரே?
பதில்: கலாம் என்பதற்கு தமிழில் கலகம் என்றும் ஒரு பொருள் உண்டு. எப்படியோ குடியரசு தலைவர் தேர்தலிலும் கலகம் உருவாகியிருக்கிறது.
கேள்வி: அந்தக் கலகம் காரணமாக திமுகவின் நிலைப்பாடு என்ன ஆகும்?
பதில்: நாங்கள் ஏற்கனவே சொன்னதில் உறுதியாக இருக்கிறோம். காங்கிரஸ் கட்சியின் சார்பாக நேர்மையான மனிதர் என்று சொல்லப்படும் ஏ.கே.ஆண்டனி சென்னைக்கு வந்து என்னிடம் பேசியிருக்கிறார். சோனியா அனுப்பி அவர் என்னிடம் சொல்லிய தகவலுக்கு நான் அப்போதே ஆதரவு அளித்திருக்கிறேன். அந்த ஆதரவிலிருந்து திமுக பின் வாங்காது. முதலில் ஒருவரைச் சொல்லிவிட்டு பிறகு நாங்கள் மாற மாட்டோம் என்றார் கருணாநிதி.
ஜனாதிபதி வேட்பாளர் குறித்து முதலில் பாதுகாப்புத்துறை அமைச்சர் ஏ.கே.ஆண்டனி கருணாநிதியுடன் தான் ஆலோசனை நடத்தினார். அப்போது, காங்கிரஸ் சார்பில் பிரணாப் முகர்ஜி, ஹமீத் அன்சாரி ஆகியோரின் பெயர்கள் முன்வைக்கப்பட்டன. இதில் சோனியா யாரை முடிவு செய்தாலும் ஓ.கே. என்று கருணாநிதி, ஆண்டனியிடம் கூறியிருந்தார்.
இதையடுத்து நிலைமை மாறியது. காங்கிரஸ் கூட்டணியில் உள்ள மம்தா பானர்ஜி அப்துல் கலாம், மன்மோகன் சிங், சோம்நாத் சாட்டர்ஜி ஆகியோரின் பெயர்களை முன் மொழிந்து குழப்பம் ஏற்படுத்தினார்.
இந் நிலையில் நேற்று முன் தினம் திருவாரூரில் நிருபர்களிடம் பேசிய கருணாநிதி, ஜனாதிபதி தேர்தல் வேட்பாளர் தேர்வில் குழப்பம் நிலவுகிறது. இதனால் எங்களது ஆதரவு யாருக்கு என்பதை பின்னர் தெரிவிக்கிறேன் என்றார்.
இந் நிலையில் நேற்று அண்ணா அறிவாலயத்தில் நிருபர்களை சந்தித்தார் கருணாநிதி அளித்த பேட்டியில்,
கேள்வி: குடியரசுத் தலைவர் தேர்தலில் உங்கள் வேட்பாளர் யார்?
பதில்: குடியரசுத் தலைவர் தேர்தலில் திமுகவின் ஆதரவு யாருக்கு என்று என்னைச் சந்தித்த பாதுகாப்புத்துறை அமைச்சர் ஏ.கே.அந்தோணியிடம் சொல்லியிருக்கிறேன். அன்றைக்குச் சொன்ன சொல்லில் இதுவரை எந்த மாற்றமும் இல்லை.
கேள்வி: காங்கிரஸ் சார்பில் பிரணாப் முகர்ஜி, அன்சாரி பெயர்களைச் சொல்கின்றனர். உங்கள் ஆதரவு யாருக்கு?
பதில்: குடியரசுத் தலைவர் வேட்பாளராக யாரை நிறுத்தலாம் என்பது தொடர்பாக அந்தோனி மூலமாக சோனியா காந்தி எனக்குச் சொல்லியிருந்தார். அதை நான் ஏற்றுக் கொண்டிருக்கிறேன். அதில் எந்த மாற்றமும் இல்லை. யார், எவர் என்று என்னைக் கேட்காதீர்கள். அப்போது நான் சொன்னதில் எந்த மாற்றமும் இல்லை என்றார் கருணாநிதி.
அதே போல காங்கிரஸ் முடிவு செய்யும் வேட்பாளரை ஆதரிப்போம் என சரத் பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ் கட்சியும் தெரிவித்துள்ளது.