லஞ்சம் வாங்கினால் சஸ்பெண்ட்: திருப்பூர் எஸ்.பி. ஆஸ்ரா கார்க் எச்சரிக்கை
திருப்பூர்: புகார் மீது நடவடிக்கை எடுக்கவும், நடவடிக்கை எடுக்காமல் இருக்கவும் லஞ்சம் பெறும் போலீஸார் மற்றும் போலீஸ் அதிகாரிகள் சஸ்பெண்ட் செய்யப்படுவார்கள் என திருப்பூர் எஸ்.பி.ஆஸ்ரா கார்க் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
மதுரையில் ரவுடியிசத்தையும், அரசியல்வாதிகள் அராஜகத்தையும் அழித்து ஒழித்த பெருமை எஸ்.பி.ஆஸ்ரா கார்கை சேரும். இந்த நிலையில் அவர் மதுரையில் இருந்து திருப்பூர் எஸ்.பி.யாக மாற்றப்பட்டார். திருப்பூர் மாவட்ட பகுதிகளில் சட்டம்-ஒழுங்கு நடவடிக்கை மற்றும் வழக்கு விசாரணைகளில் போலீசார் லஞ்சம் பெறுவதாக அவருக்கு புகார்கள் சென்றது. இதனையடுத்து லஞ்சம் வாங்கிய காங்கயம் போக்குவரத்து இன்ஸ்பெக்டர் திருநாவுக்கரசு, உடுமலை எஸ்.ஐ. பூர்ணிமா ஆகியோர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில் லஞ்சம் பெறும் போலீசார் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அஸ்ரா கார்க் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
புகார் மனு மீது நடவடிக்கை எடுக்கவும், நடவடிக்கை எடுக்காமல் இருக்ககுவும், ஒரு தரப்பினருக்கு சாதகமாக நடந்து கொள்ளவும், குற்றச் செயல்கள் மற்றும் விதிமுறை மீறல்களை கண்டு கொள்ளாமல் இருக்கவும், லஞ்சம் (பணம்) வாங்கும் போலீசார் மற்றும் போலீஸ் அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். மேலும், உடனே அவர்கள் சஸ்பெண்ட் செய்யப்படுவர்.
தங்களது கட்டுப்பாட்டில் உள்ள இன்ஸ்பெக்டர்கள், எஸ்.ஐ.க்கள் தவறான நடவடிக்கையில் ஈடுபடாமல் அவர்களை டி.எஸ்.பி.க்கள் தீவிரமாக கண்காணிக்க வேண்டும் என்று எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இதனால் லஞ்சம் வாங்கும் போலீசார் விரைவில் இந்த லிமிட்டை விட்டு வேறு லிமிட்டுக்கு தாவிவிட வேண்டும். இல்லை எனில் மானமும் போச்சு, வருமானமும் போச்சு என பதறி வருகின்றனர்.