2006ல் வாங்கியதை விட பல மடங்கு ஓட்டு வாங்கிய தேமுதிக!
இக்கட்சிக்கு கூடுதல் வாக்குகள் கிடைக்க திமுக, மார்க்சிஸட் கம்யூனிஸ்ட் கட்சிகளே காரணம் என்று கூறப்படுகிறது.
புதுக்கோட்டையில் கடந்த 2006ம் ஆண்டு வாங்கிய ஓட்டுக்களை விட இந்த முறை கூடுதலான வாக்குகளைப் பெற்றுள்ளது தேமுதிக. 2006ம் ஆண்டுதான் முதல் முறையாக தேமுதிக சட்டசபைத் தேர்தலை சந்தித்தது. அப்போதும் தனித்தே போட்டியிட்டது. இந்த முறை இடைத் தேர்தலிலும் அககட்சி தனித்தே போட்டியிட்டது.
இருப்பினும் கடந்த 2006 தேர்தலை விட இந்த முறை கூடுதலான வாக்குகளை அக்கட்சி பெற்றுள்ளது இதனால் அதன் பலம் வளர்ந்து விட்டதா என்ற கேள்வி எழுகிறது. ஆனால் பலம் வளர்ந்ததோ இல்லையோ நிச்சயம் வேறு கட்சிகளிடமிருந்து வாக்குகள் தேடி வந்துள்ளது என்பது மட்டும் வெட்ட வெளிச்சமாகியுள்ளது.
புதுக்கோட்டை இடைத் தேர்தலை திமுக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், மதிமுக, பாஜக, பாமக என முக்கிய கட்சிகள் அனைத்தும் புறக்கணித்து விட்டன. இதில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தேமுதிகவுக்கு ஆதரவாக போட்டியிடவில்லை. திமுகவின் கணக்கு என்ன என்பது தெரியவில்லை. அக்கட்சி போட்டியிடாமல் ஒதுங்கிக் கொண்டது.
இருப்பினும் தேர்தலில் தேமுதிகவுக்கு கூடுதல் வாக்குகள் கிடைக்க மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும், திமுகவும் காரணமாக இருக்கலாம் என்று கூறப்படுகிறது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர், தொகுதி, கம்யூனிஸ்ட் கட்சியிடமிருந்து கை மாறிப் போவதை விரும்பாமல் தேமுதிகவுக்கு வாக்களித்திருக்கலாம். அதேசமயம், திமுகவினரில் ஒரு பகுதியினர் தேமுதிகவுக்கு வாக்களித்திருக்கலாம் என்று கூறப்படுகிறது.
முன்னாள் அமைச்சர் ரகுபதி, திமுகவினர் யாரும் இத்தேர்தலில் வாக்களிக்கக்கூடாது, அனைவரும் ஓ பாரத்தை நிரப்பி கொடுக்க வேண்டும் என்று கூறியிருந்தார். ஆனால் அதை புறக்கணித்து விட்டு ஏராளமான திமுகவினர் தேர்தலில் கலந்து கொண்டு வாக்களித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
மொத்தத்தில் அதிமுகவுக்கு எதிராக தேமுதிகவை வலுவான முறையில் கொம்பு சீவி விடும் முயற்சியாகவே இது பார்க்கப்படுகிறது. எப்படியோ கடந்த முறையை விட கூடுதல் வாக்குகளை வாங்கி, தனது எதிர்கால அரசியல் கணக்குகளுக்கு இதை பயன்படுத்திக் கொள்ள தேமுதிகவுக்கு ஒரு வாய்ப்பாக புதுக்கோட்டை இடைத் தேர்தல் அமைந்து விட்டது என்பது மட்டும் உண்மை.