ஜெ. தலைமையில் நாளை 1006 ஜோடிகளுக்கு திருமணம்.. களை கட்டுகிறது கருமாரியம்மன் கோவில்
சென்னை: முதல்வர் ஜெயலலிதா தலைமையில் 1006 ஜோடிகளுக்கு நாளை சென்னை அருகே திருவேற்காடு கருமாரியம்மன் கோவிலில் இலவச திருமணம் நடைபெறுகிறது. இந்த திருமணத்திற்கு இந்து சமய அறநிலையத்துறை பிரமாண்ட ஏற்பாடு செய்துள்ளது.
திங்கள்கிழமை காலை 10 மணிக்கு கோவில் அருகே அமைக்கப்பட்டுள்ள விசேஷ பந்தலில் இந்த திருமண விழா கோலாகலமாக நடைபெறுகிறது. இதற்கான விசேஷ ஏற்பாடுகள் விரிவான முறையில் செய்யப்பட்டுள்ளன
முதல்வர் ஜெயலலிதா தலைமை தாங்கி தாலி எடுத்துக் கொடுத்து திருமணங்களை நடத்தி வைக்கிறார். சிறப்புரையாற்றுகிறார்.
சட்டசபை சபாநாயகர் ஜெயக்குமார், அமைச்சர்கள் உள்ளிட்டோர் இதில் கலந்து கொள்கின்றனர்.
21 வரிசை சீர்வரிசைகள்
1006 ஜோடி மணமக்களுக்கும் அறநிலையத்துறை சார்பில் 21 வகையான சீர்வரிசை பொருட்கள் வழங்கப்படுகிறது. 4 கிராம் பொன் திருமாங்கல்யம், 6 கிராம் எடையுள்ள வெள்ளி மெட்டிகள் 4 மற்றும் முகூர்த்தப் புடவை, ரவிக்கை, சரிகை வேட்டி துண்டு மற்றும் சட்டை ஆகிய சுபமுகூர்த்த பொருட்கள் மணமக்களுக்கு வழங்கப்படுகிறது.
இது தவிர சீர்வரிசைப் பொருட்களாக பித்தளை காமாட்சியம்மன் விளக்கு, எவர்சில்வர் பொருட்களான குங்குமச்சிமிழ், குடம், டிபன் கேரியர், அன்னக்கரண்டி, பெரிய சிறிய கரண்டிகள், பால்பாத்திரம், தட்டு, டம்ளர், வாளி, சாப்பாட்டு தட்டு, கடாய், பெரிய சிறிய அடுக்குகள், ஜல்லிக்கரண்டி, தூக்குப்பாத்திரம், பாய், தலையணை, போர்வை உள்ளிட்ட ஒரு குடும்பத்திற்கு தேவையான பொருட்களும் 1006 ஜோடி மணமக்களுக்கும் வழங்கப்படுகிறது.
கின்னஸ் சாதனை
இந்தத் திருமண விழா கின்னஸ் சாதனையாகவும் மலரவிருக்கிறது என்பதால் அதிமுகவினர் பெருமளவில் இந்த திருமண விழாவுக்கு திரண்டு வருகின்றனர். மேலும் ஜெயலலிதாவுக்கு பிரமாண்ட வரவேற்பு அளிக்கவும் அதிமுக தரப்பில் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.