எதிர்பார்ப்புகள் பொய்யானது - வட்டி விகிதத்தில் மாற்றம் இல்லை : ரிசர்வ் வங்கி
கடன் கொள்கை தொடர்பான ஆய்வறிக்கையை ரிசர்வ் வங்கி வெளியிட்டது.
ரிசர்வ் வங்கியானது வட்டி விகிதத்தை கணிசமாக குறைக்கும் என்பதால் வங்கிக் கடன்கள் எளிதாகக் கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால் நாட்டின் தற்போதைய பொருளாதார நிலைமையைக் கருத்தில் கொண்டு வங்கிகளுக்கான குறுகிய கால வட்டி விகிதத்தில் எந்த மாற்றமும் இல்லை என்று இன்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இதேபோல் வங்கிகளின் ரொக்கக் கையிருப்பு விகிதத்தில் மாற்றம் இருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் ரொக்கக் கையிருப்பு விகிதத்திலும் எந்த ஒரு மாற்றம் இல்லை என்றும் விலைவாசி உயர்வால்தான் இந்த முடிவு மேற்கொள்ளப்பட்டதாகவும் ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.
இன்றைய ரிசர்வ் வங்கியின் அறிவிப்பானது தொழில்துறையில் பெரும் ஏமாற்றத்தைத் தந்துள்ளதாகக் கூறப்படுகிறது. இந்த ஏமாற்ற்மானது நாட்டின் பங்குச் சந்தையிலும் எதிரொலித்தது.
இதுபற்றிக் கருத்து தெரிவித்த ரிசர்வ் வங்கி ஆளுநர் சுப்பாராவ், வட்டி விகிதம் குறைப்பு அல்லது ரொக்கக் கையிருப்பு விகிதத்தில் மாற்றம் செய்து பணப்புழக்கத்தை அதிகரிப்பதால் வேறு விளைவுகள்தான் ஏற்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.
இதனிடையே மே மாதத்திற்கான சில்லறை விலை பணவீக்கமானது சற்றே அதிகரித்திருக்கிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.