ஆர்த்தி தொடர்ந்த ஜீவனாம்ச வழக்கு.. சென்னை நீதிமன்றம் விதித்த 2 வார கெடு! ரவி மோகனுக்கு பின்னடைவா?
சென்னை: நடிகர் ரவி மோகன் இடைக்கால ஜீவனாம்சம் வழங்கக் கோரி அவரது மனைவி ஆர்த்தி தொடர்ந்த வழக்கை 2 வாரத்தில் விசாரித்து முடிக்க குடும்ப நல நீதிமன்றத்திற்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. குழந்தைகளின் படிப்பு உள்ளிட்ட செலவுகளுக்கு ரவி மோகன் இடைக்கால ஜீவனாம்சம் அளிக்க வேண்டும் என்று அவரது மனைவி ஆர்த்தி வழக்கு தொடர்ந்திருந்தார்.
கடந்த 2009-ஆம் ஆண்டு நடிகர் ரவி மோகன் மற்றும் ஆர்த்தி இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். 15 ஆண்டுகளாக சுமூகமாக இவர்களின் குடும்ப வாழ்க்கை தொடர்ந்து வந்த நிலையில், திடீரென கருத்து வேறுபாடு எழுந்தது. இதனால் 024-ஆம் ஆண்டு தனது மனைவி ஆர்த்தியிடம் இருந்து விவாகரத்து கோரி நடிகர் ரவி மோகன் குடும்ப நல நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

இதற்கிடையே பாடகி கெனிஷாவுடன் ரவி மோகன் பழகி வந்தார். கெனிஷாவுடன் ரவி மோகன் தொடர்ந்து பல்வேறு நிகழ்ச்சிகளிலும் பங்கேற்று வந்தார். இந்த நிலையில் ரவி மோகன் உடன் பிரேக் அப் செய்வதாக நேற்று கெனிஷா அறிவித்தார். இதன்பின் இன்று ரவி மோகன் செய்தியாளர்கள் சந்திப்பில் மனைவி ஆர்த்தி மற்றும் அவரது மாமியார் சுஜாதா ஆகியோர் மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை முன் வைத்தார்.
செய்தியாளர்கள் சந்திப்பின் போதே ரவி மோகன் கண் கலங்கி அழுதது பல்வேறு தரப்பினர் மத்தியிலும் விவாதமாகியது. மனைவி ஆர்த்தியிடம் இருந்து விவாகரத்து கிடைக்கும் வரை தாம் எந்தவொரு படத்திலும் நடிக்கப் போவதில்லை என்றும் அறிவித்தார். நடிகர் ரவி மோகன் மற்றும் அவரது மனைவி ஆர்த்தி ரவிக்கும் இடையே விவாகரத்து வழக்கு சென்னை குடும்ப நல நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.
இதனிடையே கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் ரவி மோகன் தனது குழந்தைகளின் பள்ளிக் கட்டணம் உட்பட எந்தவொரு இடைக்கால ஜீவனாம்சத்தையும் வழங்கவில்லை என சென்னை குடும்ப நல நீதிமன்றத்தில் ஆர்த்தி புதிய மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். ஆனால் அந்த மனு விசாரணைக்கு எடுத்து கொள்ளப்படவில்லை.
இடைக்கால ஜீவனாம்ச மனுவை விரைந்து விசாரணை நடத்தி முடிக்க சென்னை குடும்ப நல நீதிமன்றத்திற்கு உத்தரவிடக்கோரி ஆர்த்தி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இந்த மனு நீதிபதி என்.செந்தில்குமார் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது ஆர்த்தி சார்பில் ஆஜரான வழக்கறிஞர், ரவி மோகன் குழந்தைகளின் படிப்பு செலவுக்காக வழங்கி வந்த தொகையை நிறுத்திவிட்டதாக தெரிவித்தார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, ஆர்த்தி தாக்கல் மனுவை இரண்டு வாரத்துக்குள் விசாரித்து உரிய உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என குடும்ப நல நீதிமன்றத்திற்கு உத்தரவிட்டுள்ளார். இதனால் ரவி மோகன் தரப்பில் என்ன மாதிரியான நடவடிக்கை எடுக்கப்படும் என்ற கேள்வி எழுந்துள்ளது.












Click it and Unblock the Notifications