திருவேற்காடு கருமாரியம்மன் கோவிலில் ஜெ. தலைமையில் 1006 ஜோடிகளுக்கு திருமணம்
தமிழகம் முழுவதும் தேர்வு செய்யப்பட்ட 1006 ஜோடிகளுக்கு இன்று திருமணம் நடத்தி வைக்கப்பட்டது. திருவேற்காடு தேவி கருமாரியம்மன் கோவிலில் இந்த திருமண விழா இன்று காலை நடந்தேறியது. முதல்வர் ஜெயலலிதா கலந்து கொண்டு தாலி எடுத்துக் கொடுத்து திருமணத்தை நடத்தி வைத்து அட்சதை தூவி ஆசிர்வதித்தார்.
சபாநாயகர் ஜெயக்குமார், அமைச்சர்கள் உள்ளிட்டோர் இதில் கலந்து கொண்டனர்.
கோவிலுக்கு அருகே போடப்பட்டிருந்த பிரமாண்ட பந்தலின் கீழ் திருமண விழா நடைபெற்றது. திருமணம் செய்து கொண்ட புதுமணத் தம்பதிகளுக்குத் தமிழக அரசின் சார்பில், தலா 4 கிராம் திருமாங்கல்யம், 4 வெள்ளி மெட்டி, முகூர்த்த பட்டுப் புடவை, ரவிக்கை, ஜரிகை வேஷ்டி, துண்டு, சட்டை ஆகிய சுபமுகூர்த்தப் பொருள்கள் வழங்கப்படுகின்றன.
மணமக்களுக்கு சீர்வரிசைப் பொருட்களாக பித்தளை காமாட்சி அம்மன் விளக்கு, எவர்சில்வர் குங்குமச் சிமிழ், எவர்சில்வர் குடம், டிபன் கேரியர், அன்னக் கரண்டி, கரண்டி பெரியது, கரண்டி சிறியது, பால் பாத்திரம், டம்ளர், தட்டு, வாளி, சாப்பாட்டுத் தட்டுகள், கடாய், பெரிய அடுக்கு பாத்திரம், சின்ன அடுக்கு பாத்திரம், அண்டி, கரண்டி, தூக்குப் பாத்திரம், பாய், தலையணை, போர்வை என 21 வகையான சீர்வரிசைப் பொருள்களும் வழங்கப்பட்டன.
கின்னஸ் சாதனை
அதிக அளவிலான இலவசத் திருமணங்களை நடத்தியவர் என்ற பெருமை இந்தத் திருமண விழாவையும் சேர்த்து முதல்வர் ஜெயலலிதாவுக்குக் கிடைத்துள்ளது. உலக அளவில் பல ஆயிரம் ஜோடிகளுக்கு இலவசமாக திருமணம் செய்து வைத்தவர் என்ற வகையில் ஜெயலலிதா புதிய சாதனை அதாவது கின்னஸ் சாதனை படைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.