அக்னி சுப்பிரமணியத்திற்கு நாடுகடந்த தமிழீழ அரசு பதவி
சென்னை: நாடுகடந்த தமிழீழ அரசின் இந்திய கல்வி, கலாச்சாரம், சுகாதாரம் மற்றும் விளையாட்டுத்துறை இயக்குநராக அக்னி சுப்பிரமணியம் நியமிக்கப்பட்டுள்ளார்.
அமெரிக்காவை தலைமையிடமாகக் கொண்டு ஈழத்தமிழர்களை ஒன்றிணைக்கும் அமைப்பாக செயல்பட்டு வருகிறது நாடுகடந்த தமிழீழ அரசு. இதன் பிரதமராக சட்டதரணி ருத்திர குமாரன் இருந்து வருகிறார். இந்த அமைப்பின் துணைப் பிரதமராகவும், நாடுகடந்த தமிழீழ அரசின் கல்வி, கலாச்சாரம், சுகாதாரம் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சராக கனடா நாட்டிலிருந்து செயல்பட்டு வருபவர் மருத்துவர் ராம் சிவலிங்கம்.
அவர் கடந்த 8ம் தேதி கையெழுத்திட்ட கடிதம் ஒன்றில் நாடுகடந்த தமிழீழ அரசின் இந்தியாவுக்கான கல்வி, கலாச்சாரம், சுகாதாரம் மற்றும் விளையாட்டுத்துறை இயக்குநராக அக்னி சுப்பிரமணியம் நியமனம் செய்யப்பட்டுள்ளதாக அறிவித்துள்ளார்.
அந்த கடிதத்தில் அவர் கூறியிருப்பதாவது,
திரு. அக்னி சுப்பிரமணியம், ‘மனிதம்' என்ற மனித உரிமை அமைப்பின் தலைவராக உள்ளார். பல்வேறு மனித உரிமை செயல்பாடுகளை முன்னெடுத்து வருகிறார்.
குறிப்பாக, 2008ம் ஆண்டில் ஐ.நா.வில் இலங்கையின் மனித உரிமை மீறல் குறித்த அறிக்கையை சமர்பித்து, அவ்வறிகையை ஐ.நா. ஏற்றுக் கொண்டது. ‘வணங்காமண்' என்ற நிவாரணப் பொருட்களை ஏற்றி வந்த கப்பலை, ஐரோப்பாவிலிருந்து ஈழத்திற்கு அனுப்பிய போது, இலங்கையால் திருப்பி அனுப்பப்பட்டது. அக்கப்பலை சென்னைக்கு வரவழைத்து தமிழக அரசு வழியே இந்திய செஞ்சிலுவை சங்கம், பன்னாட்டு செஞ்சிலுவை சங்கம் மற்றும் இலங்கை செஞ்சிலுவை சங்கம் என அனைத்தையும் ஒருங்கிணைத்து நிவாரணப் பொருட்களை வன்னியில் உள்ள மக்களுக்குச் சென்றடைய செய்துள்ளார்.
ஐ.நா.வின் இலங்கைக்கு எதிரான நிபுணர் குழு அறிக்கையினை தமிழில் மொழி மாற்றம் செய்து போர்க் குற்றவாளி என்ற பெயரில் தமிழில் புத்தகம் ஒன்றை வெளியிட்டுள்ளார். அத்தகையவர் நாடுகடந்த தமிழீழ அரசின் இந்தியாவுக்கான கல்வி, கலாச்சாரம், சுகாதாரம் மற்றும் விளையாட்டுத்துறை இயக்குநராக நியமிக்கப்படுகிறார் என்று அவர் அதில் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications