புதுச்சேரிக்கான புதிய பிரெஞ்சு எம்.பியாக தியரி மரியாணி தேர்வு!
பிரான்ஸ் நாடாளுமன்றத்திற்கு தேர்தல் நடந்தது. இதில் புதுச்சேரி யூனியன் பிரதேசத்திற்குட்பட்ட பகுதிகளில் வசிக்கும் பிரெஞ்சு குடியுரிமை பெற்ற வாக்காளர்களும் வாக்களித்தனர். இவர்களுக்காக சிறப்பு வாக்குச் சாவடிகள் புதுவை மற்றும் காரைக்காலில் அமைக்கப்பட்டிருந்தன.
இதில் புதுச்சேரி, காரைக்காலை உள்ளடக்கிய 11வது நாடாளுமன்றத் தொகுதியில் தியரி மரியாணிக்கும், சோஷலிச கட்சியின் வேட்பாளர் மார்க் வில்லருக்கும் இடையே போட்டி நிலவியது. இதில் மரியாணி 10,390 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். மார்க்குக்கு 9532 வாக்குகளே கிடைத்தன.
பிரான்ஸ் நாடாளுமன்றத்தில் மொத்தம் உள்ள எம்.பிக்களின் எண்ணிக்கை 577 ஆகும். இதில் தற்போது 11 உறுப்பினர்களை வெளிநாடு வாழ் பிரெஞ்சு மக்கள் தேர்வு செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
49 நாடுகள்
மொத்தம் உள்ள தொகுதிகளில், 11 தொகுதிகளை வெளிநாடு வாழ் பிரெஞ்சு மக்களுக்காக அந்த நாடு ஒதுக்கியுள்ளது. இந்த 11 தொகுதிகளில் கடைசித் தொகுதிதான் புதுச்சேரி உள்ளிட்ட தொகுதியாகும். இந்த தொகுதியில் மொத்தம் 49 நாடுகளைச் சேர்ந்த பிரெஞ்சு குடியுரிமை பெற்ற மக்கள் இடம் பெற்றுள்ளனர். ஆசியாவின் பல்வேறு நாடுகள், மால்டோவா, பெலாரஸ், உக்ரைன், ஓசியானியா ஆகியவையும் இதில் இடம் பெறுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.