மகராஷ்டிரா தலைமைச் செயலக தீவிபத்துக்கு 5 பேர் பலி-முதல்வர், துணை முதல்வர் அறைகள் நாசம்
மும்பை: மும்பையில் உள்ள மகாராஷ்டிரா அரசு தலைமைச் செயலகத்தில் நேற்று மதியம் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இதில் அந்த கட்டிடத்தில் இருந்த 5 பேர் பலியாகினர். 16 பேர் காயம் அடைந்தனர். மேலும் அங்கு வைக்கப்பட்டிருந்த ஆதர்ஷ் ஊழல் சம்பந்தப்பட்ட ஆவணங்கள் தீயில் எரிந்து நாசமாகின. ஆனால் ஆவணங்கள் பத்திரமாக இருப்பதாக மகாராஷ்டிர அரசு தெரிவித்துள்ளது.
மும்பையில் உள்ள மகாராஷ்டிர அரசு தலைமைச் செயலகமான மந்த்ராலயாவில் உள்ள ஒரு கட்டிடத்தில் நேற்று பிற்பகல் 2.45 மணிக்கு திடீர் என்று பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. அந்த கட்டிடத்தின் 4வது தளத்தில் தீ விபத்து ஏற்பட்டது. இந்த தளத்தில் தான் ஆதர்ஷ் குடியிருப்பு ஊழல் மற்றும் நக்ர்புற வளர்ச்சித் துறை சம்பந்தமான ஆவணங்கள் வைக்கப்பட்டிருந்தன. அவை அனைத்தும் தீயில் எரிந்து நாசமாகின.
அந்த கட்டிடத்தில் தான் முதல்வர், முக்கிய அமைச்சர்கள் மற்றும் முக்கிய அரசு உயர் அதிகாரிகளின் அலுவலகங்கள் உள்ளன. கட்டிடத்தின் 4வது தளத்தில் உள்ள பழங்குடியின மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் பாபன்ராவின் அறையில் தான் தீ விபத்து ஏற்பட்டது.
தீ விபத்து ஏற்பட்ட சிறிது நேரத்தில் தீ மள, மளவென பிற அறைகள், மற்றும் 5வது, 6வது தளங்களுக்கு பரவியது. தீ விபத்து ஏற்பட்டவுடன் 20 நிமிடங்களில் அந்த கட்டிடத்தில் இருந்த 5,000 பேர் வெளியேற்றப்பட்டனர்.
இது குறித்து உடனே தீயணைப்புத்துறைக்கு தகவல் கொடுக்கப்பட்டது. தகவல் அறிந்த உடன் 25 தீயணைப்பு வண்டிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விடிய, விடியப் போராடி இன்று அதிகாலை தீயை அணைத்தன. இந்த விபத்தால் அப்பகுதி கரும்புகை மண்டலமாகக் காட்சியளித்தது. இந்த விபத்தில் 5 பேரைக் காணவில்லை. முதலில் 3 பேரின் உடல்கள் மீட்கப்பட்டன. இந்நிலையில் தற்போது மேலும் 2 பேரின் உடல்கள் மீட்கப்ப்டடுள்ளன. இதையடுத்து பலி எண்ணிக்கை 5க உயர்ந்துள்ளது. மேலும் 16 பேர் காயம் அடைந்துள்ளனர்.
காயம் அடைந்தவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். இந்த விபத்தில் 4வது, 5வது மற்றும் 6வது தளங்கள் எரிந்து நாசமாகின. தீ விபத்து ஏற்பட்டபோது கட்டிடத்திற்குள் சிக்கிய அனைவரும் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர்.
திடீர் என்று தீ விபத்து ஏற்பட்டதற்கான காரணம் என்னவென்று தெரியவில்லை.
தீவிபத்தில் முதல்வர் அசோக் சவான், துணை முதல்வர் ஆகியோரின் அறைகள் எரிந்து போய் விட்டன. அங்கிருந்த ஆவணங்களும் எரிந்து போய் விட்டன. அதேசமயம், ஆதர்ஷ் ஊழல் வழக்கு தொடர்பான ஆவணங்கள் பத்திரமாக இருப்பதாக மகாராஷ்டிர அரசு தெரிவித்துள்ளது. இந்நிலையில் இந்த விபத்து குறித்து விசாரணை நடத்த குழு ஒன்று அமைக்கப்படும் என்று முதல்வர் சவான் தெரிவித்துள்ளார்.
விபத்துக்கான காரணம் குறித்து தீயணைப்புத் துறை விசாணையைத் துவங்கியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.