புகார் சொன்னால் செல்போனை 'சுவிட்ச் ஆப்' செய்யும் தமிழக மின்சார வாரியம்!
சென்னையைச் சேர்ந்த வழக்கறிஞர் விஜய் தாக்கல் செய்த பொது நல மனுவில்,
சென்னையில் பல பகுதிகளில் குறைந்த மின்னழுத்த பிரச்சனை ஏற்பட்டுள்ளது. இந்தப் பிரச்சனையால் பெரியவர், குழந்தைகள் என அனைத்து தரப்பினரும் பாதிக்கப்பட்டுள்ளனர். குறைந்த மின்னழுத்தம் காரணமாக டி.வி, மிக்சி, கிரைண்டர், பிரிட்ஜ், வாஷிங் மெஷின் ஏ.சி. இயந்திரம் உள்ளிட்ட விலை உயர்ந்த மின்னணுப் பொருள்கள் பழுதாகின்றன. இதனால் மக்களுக்கு வீணான பொருட்செலவு ஏற்படுகிறது. கோடை கால இரவுகளில் தூக்கமின்றி தவிக்கும் நிலைமை ஏற்பட்டுள்ளது.
இதனால் எல்லாருக்குமே மனதளவில் பாதிப்பு ஏற்படுகிறது. மின்சார பிரச்சனைகள் பற்றி புகார் கொடுப்பதற்கு தனி செல்போன் எண்கள் தரப்பட்டுள்ளன. ஆனால் அந்த எண்களை தொடர்பு கொண்டாலும் சரியான பதில் தரப்படுவதில்லை.
கொடுத்த புகாரின் மீது நடவடிக்கையும் எடுப்பதில்லை. அதிக புகார்கள் வந்தால், செல்போனை சுவிட்ச் ஆப்' செய்து விடுகின்றனர். இதனால் பிரச்சனைகளுக்கு தீர்வு காணவும் முடிவதில்லை. எனவே, சென்னை மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் நிலவும் குறைந்த மின்னழுத்த பிரச்சனையை ஒரு குறிப்பிட்ட காலத்துக்குள் தீர்ப்பதற்கு மின்சார வாரியத்துக்கு உத்தரவிட வேண்டும் என்று கூறப்பட்டிருந்தது.
இந்த மனுவை தலைமை நீதிபதி எம்.ஒய்.இக்பால், நீதிபதி டி.எஸ்.சிவஞானம் ஆகியோர் விசாரித்தனர். அவர்கள் பிறப்பித்த உத்தரவில், தமிழகத்திலும் குறிப்பாக சென்னையிலும் மின்சப்ளை சரிவர இல்லை என்பது மறுப்பதற்கில்லை. சென்னையில் பல இடங்களில் மின் அழுத்தத்தில் ஏற்ற இறக்கங்கள் உள்ளன. இதனால் பல இடையூறுகளை மக்கள் சந்திக்க வேண்டியதுள்ளது.
எனவே இந்த வழக்கில், தமிழ்நாடு மின்சார வாரிய தலைமைப் பொறியாளர் (வர்த்தகம்) விளக்கமான பதில் மனுவை தாக்கல் செய்ய வேண்டும். தமிழகத்திலும், சென்னையிலும் மின்சார சப்ளையில் உள்ள தற்போதைய நிலை மற்றும் குறைந்த மின்னழுத்த பிரச்சனையை தீர்ப்பதற்காக மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் ஆகிய விவரங்களை அதில் அவர் தெரிவிக்க வேண்டும் என்று உத்தரவிட்டனர்.
வழக்கு விசாரணையை ஜுலை 3ம் தேதிக்கு நீதிபதிகள் தள்ளிவைத்தனர்.