வெள்ளாட்டின் தலையை காட்டி ஓநாய் கறி விற்பதில் பிரணாப் கெட்டிக்காரர்: நாஞ்சில் சம்பத்
இது குறித்து அவர் ராமேஸ்வரத்தில் செய்தியாளர்களிடம் கூறுகையில்,
முல்லைப்பெரியாறு அணைக்காக தொடர்ந்து வைகோ போராடி வருவதை பொறுக்க முடியாத கேரள அரசு தற்போது சிறுவாணி, அமராவதி தண்ணீரை தேக்கி வைக்கிறது. இதைக் கண்டித்து வரும் 25ம் தேதி கோவையில் மனிதச்சங்கிலி போராட்டம் நடைபெறுகிறது.
பிரணாப் முகர்ஜியை குடியரசுத் தலைவர் வேட்பாளராக அறிவித்துள்ளது ஊழல் திமிங்கலங்களுக்கு மகிழ்ச்சியான செய்தி. ஆனால் நான்காவது ஈழப்போர் ஒடுக்கப்பட்டதும், தமிழர்கள் உரிமையை இழந்ததும் பிரணாப் முகர்ஜியால் தான் என்பதை எந்த தமிழனும் மறக்க மாட்டான். வெள்ளாட்டின் தலையை காட்டி ஓநாய் கறி விற்பதில் பிரணாப் முகர்ஜி கெட்டிக்காரர்.
ஈழத்தில் நடைபெற்ற எல்லா துயரச் சம்பவங்களுக்கும் துணை போனவர், நாட்டின் குடியரசுத் தலைவர் ஆவது தமிழர்களுக்கு துயரமான செய்தி தான்.
டெசோவை முன்பு புதைத்ததே இந்த கருணாநிதி தான். இவர் நடத்திய நாடகத்தில் மிகவும் மோசமான நாடகம் இது தான். கருணாநிதி முதல்வராக இருந்தபோது சோனியாவிற்கு அடிமையாகவும், மன்மோகன் அரசுக்கு விசுவாசியாகவும் இருந்து கொலை பாதகச் செயலுக்கு துணை போன குற்றவாளி ஆவார். ஆனால் இன்று டெசோ என்று ஒப்பாரி வைப்பது கேலிக்கூத்தானது. இதை திமுக தொண்டனே ரசிக்க மாட்டான்.
தமிழக மீனவர்கள் எல்லை தாண்டி சென்றால் 20 ஆண்டு சிறை தண்டனை என்று ராஜபக்சே அறிவித்துள்ளார். இத்தாலிக்காரனை கைது செய்ய மலையாள போலீசாருக்கு அதிகாரம் உள்ளது. ஆனால் தமிழக மீனவர்கள் தாக்கும் இலங்கை கடற்படையினர் மீது நடவடிக்கை எடுக்க தமிழக அரசு தயாரில்லை. அதே போல மத்திய அரசும் கண்டு கொள்ள தயாரில்லை என்றார்.