எதியூரப்பா கோஷ்டிக்கு பதிலடி - சதானந்த கவுடாவுக்கு ஆதரவு தெரிவித்து 2 அமைச்சர் ராஜினாமா செய்ய முடிவு
பெங்களூர்: கர்நாடக அரசியலில் எதியூரப்பாவுக்கு ஆதரவாகவும் சதானந்த கவுடாவை நீக்கவும் வலியுறுத்தி 8 அமைச்சர்கள் ராஜினாமா செய்ததற்கு பதிலடியாக சதானந்தாவை மாற்ற எதிர்ப்புத் தெரிவித்து 2 அமைச்சர்கள் ராஜினாமா செய்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
கர்நாடக முதல்வராக எதியூரப்பாவை நியமிக்க வேண்டும் அல்லது அவரது ஆதராவளர் ஜெகதீஷ் ஷெட்டருக்கு முதல்வர் பதவி வழங்க வேண்டும் என்பதை வலியுறுத்தி 8 அமைச்சர்கள் சதானந்த கவுடாவிடம் நேரில் ராஜினாமா கொடுத்தனர். மேலும் 2 அமைச்சர்கள் ராஜினாமா செய்ய தயாராக உள்ளனர்.
இதைத் தொடர்ந்து கர்நாடக பாஜகவில் உச்சகட்ட கோஷ்டி மோதல் வெடித்தது. இன்று காலை ஆளுநர் பரத்வாஜை சதானந்த கவுடா நேரில் சந்தித்து அரசியல் நிலவரம் பற்றி விவாதித்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய சதானந்த கவுடா, பிரச்சனைகளுக்கு விரைவில் தீர்வு காணப்படும் என்று கூறியிருந்தார்.
இந்நிலையில் எதியூரப்பா கோஷ்டிக்கு பதிலடி கொடுக்கும் விதமாக சதானந்த கவுடாவை மாற்ற எதிர்ப்புத் தெரிவித்து அமைச்சர்கள் ஆனந்த் அஸ்னோதிகர் மற்றும் பாலச்சந்திர ஜர்கிகோலி ஆகியோர் ராஜினாமா செய்யப் போவதாக அறிவித்துள்ளனர்.
இதேபோல் சதானந்த கவுடாவுக்கு ஆதரவு தெரிவித்து மற்ற அமைச்சர்களும் ராஜினாமா செய்ய வேண்டும் என்று அமைச்சர் ஆனந்த் வலியுறுத்தியுள்ளார்.












Click it and Unblock the Notifications