கூடங்குளத்தில் எரிபொருள் நிரப்புவதற்கான ஏற்பாடுகள் தொடங்கின
நெல்லை மாவட்டம் கூடங்குளத்தில் ரூ.13500 கோடி மதிப்பீட்டில் 1000 மெகா வாட் உற்பத்தி திறனுள்ள 2 அணு உலைகள் அமைக்கப்பட்டுள்ளன. தமிழகத்தில் கடுமையான மின்தட்டுபாடு நிலவும் நிலையில் முதல் அணு உலை மூலம் விரைவில் மின் உற்பத்தி தொடங்குவதற்கான ஏற்பாடுகள் கூடங்குளத்தில் இரவு, பகலாக நடந்து வருகின்றன.
இந்நிலையில் இந்திய அணுசக்தி கழக செயல் இயக்குனர் நானிஸ் நகாய்ச் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியுள்ளதாவது:
கூடங்குளம் அணு மின் நிலையத்தில் முதல் அணு உலையின் அழுத்த கலனில் யுரேனியம் எரிபொருள் நிரப்புவதற்கான ஆய்வுகள் தொடங்கியுள்ளன. இது 10 நாட்கள் முதல் 12 நாட்கள் வரை நடைபெறும். இந்த ஆய்வின் அதி நவீன கம்யூட்டர் சாதனங்கள் மூலம் எடுக்கப்படும் புள்ளி விபரங்கள் எதிர்காலத்தில் அணு உலை இயக்கத்தை தொடங்கிய பின்னரும் ஆய்வுகள் நடத்த உதவியாக இருக்கும்.
இந்த ஆய்வின் முடிவுகள் அணு சக்தி ஒழுங்கு முறை வாரியத்தின் ஆய்வுக்கு அனுப்பிவைக்கப்படும். அதன் பின்னர் அவர்களின் அனுமதியை பெற்ற பின்னர் எரிபொருள் நிரப்பப்படும். அணு உலை இயக்கத்தின் போதும் 4 ஆண்டுகளுக்கு ஒரு முறையும், அழுத்த கலனில் ஆய்வு நடத்தப்படும். இந்த ஆய்வுகள் தண்ணீருக்கு அடியிலும் ஆய்வு செய்யும் திறன் கொண்ட அதிநவீன தானியங்கி கம்யூட்டர் சாதனங்கள் மூலம் மேற்கொள்ளப்படுகிறது. இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.