(காதல்) பாடம் கற்றுத்தந்த பள்ளி ஆசிரியையை மணந்த மாணவன்!
குமரி: பள்ளியில் பாடம் கற்றுக் கொடுத்த ஆசிரியையை காதலித்த மாணவன் பள்ளிப் படிப்பை முடித்த பிறகு அவரையே திருமணம் செய்து கொண்டுள்ளார்.
குமரி மாவட்டம் கருங்கல்லை அடுத்த பாலப்பள்ளம் பகுதியைச் சேர்ந்தவர் ரவிக்குமார். வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார். அவரது மகன் ரோஷன் ஸ்மித். அவர் நாகர்கோவிலில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் கடந்த ஆண்டு பி.டெக். சேர்ந்தார். ஆனால் பாடம் கடினமாக இருப்பதாகவும், அதனால் கல்லூரிக்கு செல்ல முடியாது என்றும் கூறிவிட்டு வீட்டில் இருந்து வந்தார்.
இந்நிலையில் திருநெல்வேலியில் செல்போன் பழுதுபார்க்கும் பயிற்சி பெறப் போவதாகக் கூறி கடந்த மாதம் 11ம் தேதி வீட்டிலிருந்து கிளம்பிச் சென்றார். அதன் பின் வீடு திரும்பவில்லை. இது குறித்து கருங்கல் காவல் நிலையத்தில் அவரது அம்மா புகார் அளித்தார். அவரது புகாரின்பேரில் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வந்தனர். இந்நிலையில் ரோஷன் ஸ்மித் 31 வயது பெண் ஒருவருடன் கருங்கல் காவல் நிலையத்திற்கு வந்தார். ரோஷன் கும்பகோணத்தில் உள்ள உறவினர் வீட்டில் தங்கி பள்ளிப் படிப்பை முடித்துள்ளார். அப்போது தனக்கு பாடம் கற்று தந்த ரோஸ் லில்லி என்ற ஆசிரியை மீது காதல் ஏற்பட்டுள்ளது. அந்த ஆசிரியையும் ரோஷனை காதலித்துள்ளார்.
இந்நிலையில் பிளஸ் டூ முடித்த பிறகு ரோஷன் நாகர்கோவில் திரும்பியுள்ளார். இங்கு கல்லூரியில் சேர்ந்ததால் அவரால் தனது காதல் ஆசிரியையை பார்க்க முடியவில்லை. இதையடுத்து கல்லூரியை கட் அடித்துவிட்டு கும்பகோணம் சென்று வந்துள்ளார். இதனால் பாடம் புரியாமல் தவித்துள்ளார். இதற்கிடையே ஆசிரியையை பிரிந்து இருக்க முடியாது என்று எண்ணிய ரோஷன் கும்பகோணம் கிளம்பிச் சென்று ஆசிரியையை கையோடு அழைத்து வந்தார். நாகர்கோவிலில் உள்ள ஒரு ஆலயத்தில் நண்பர்கள் உதவியோடு திருமணம் செய்துள்ளார். அதன் பின்னர் காவல் நிலையத்தில் தஞ்சம் அடைந்தார்.
மாணவன், ஆசிரியை காதல் கதையை கேட்ட போலீசார் அதிர்ச்சி அடைந்தனர். இரு வீட்டாருக்கும் தகவல் தெரிவித்தனர். இருதரப்பினரும் ஏற்றுக் கொள்ள மறுத்துவிட்டனர். இதையடு்த்து போலீசார் காதலர்கள் இருவரும் மேஜர் என்பதால் விசாரணைக்கு தேவைப்படும்போது அழைப்பதாக கூறி அனுப்பி வைத்தனர்.












Click it and Unblock the Notifications