கர்நாடகம்: லிங்காயத்துக்கு முதல்வர் பதவி-ஒக்கலிகருக்கு துணை முதல்வர் பதவி: பாஜக திட்டம்
பெங்களூர்: கர்நாடக மாநிலத்தில் ஓராண்டுக்கும் மேலாக முன்னாள் முதல்வர் எதியூரப்பா கோஷ்டி கொடுத்து வந்த நெருக்கடிக்கு தீர்வு காணும் சமரச திட்டத்தை பாரதிய ஜனதா கட்சி மேலிடம் தயாரித்துள்ளதாகக் கூறப்படுகிறது. இதை ஏற்றுக் கொண்டு முதல்வர் சதானந்த கவுடா பதவியிலிருந்து விலக ஒப்புதல் தெரிவித்திருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
கர்நாடக மாநில ஆளும் பாரதிய ஜனதா கட்சிக்குள் ஏற்பட்டுள்ள உட்கட்சி மோதலானது சாதிய ரீதியாக மிகவும் கூர்மையாக வெடித்துக் கிடக்கிறது. கர்நாடகத்தின் லிங்காயத்துகள், ஒக்கலிகர்கள் ஆகியோர் பெரும்பான்மையினர். லிங்காயத்து சமூகத்தைச் சேர்ந்த எதியூரப்பா முதல்வர் பதவியிலிருந்து விலக வேண்டிய நிலையில் ஒக்கலிகர் சமூகத்தைச் சேர்ந்த சதானந்த கவுடா முதல்வராக்கப்பட்டார்.
பின்னர் சிறையிலிருந்து வெளியே வந்த எதியூரப்பா தமக்கு மீண்டும் முதல்வர் பதவி கொடுக்க வேண்டும் என்று நெருக்கடி கொடுத்தது முதல் இது லிங்காயத்- ஒக்கலிகர் மோதலாக மாறியது. இந்த மோதல் மிகவும் கூர்மையடைந்து சதானந்த கவுடாவின் ஆதரவாளராக இருந்த ஜெகதீஷ் ஷெட்டரும் கூட லிங்காயத்து சமூகத்தவர் என்பதால் எதியூரப்பாவையே ஆதரிக்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டார். இதைத் தொடர்ந்து எதியூரப்பாவும் கூட தமக்கு முதல்வர் பதவி கிடைக்காமல் போனாலும் பரவாயில்லை.. லிங்காயத்து சமூகத்தைச் சேர்ந்தவரான ஜெகதீஷ் ஷெட்டருக்கு முதல்வர் பதவி கொடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினார். இந்த லாபி ரொம்பவே ஒர்க் அவுட் ஆகவும் செய்தது. இதன் உச்சமாகத்தான் அமைச்சர்கள் ராஜினாமா செய்து நெருக்கடி கொடுக்க வேறுவழியே இல்லாமல் புதிய சமரச திட்டத்தை உருவாக்க பாஜக மேலிடம் முன்வந்தது.
இதனடிப்படையில் லிங்காயத் சமூகத்தைச் சேர்ந்த ஒருவர் முதல்வராக பொறுப்பேற்றால் ஒக்கலிகர் சமூகத்தைச் சேர்ந்தவர் துணை முதல்வராக வேண்டும்..அப்போதுதான் பிரச்சனை முடிவுக்கு வரும் என்பது ஒரு திட்டம். மற்றொரு சமூகத்தினரான குருபாக்களை சமாதானப்படுத்தும் வகையில் தொடர்ந்தும் பாஜக தலைவராக ஈஸ்வரப்பாவையே நீட்டிக்கச் செய்வது மற்றொரு திட்டம். இதற்கு சதானந்தாவும் ஒப்புதல் தெரிவித்துவிட்டதாகவே கூறப்படுகிறது.
இது தொடர்பாக கருத்து தெரிவித்த சதானந்த கவுடா, கட்சி மேலிடம் என்ன முடிவை எடுத்தாலும் அதை ஏற்றுக் கொள்வேன். கடந்த 11 மாத ஆட்சிக் காலத்தில் எந்த ஒரு முறைகேடும் இல்லாத வகையில் நேர்மையாக ஆட்சியை நடத்தி இருக்கிறேன் என்றார் அவர்.
அவரது இந்த பேட்டியே முதல்வர் பதவியிலிருந்து அவர் விலக ஒப்புதல் தெரிவித்துவிட்டதாகவே கர்நாடக அரசியலில் கருதப்பட்டு வருகிறது.