எங்களுக்கு தெரியும்.. நீங்க உங்க வேலையை பாருங்க...: இந்தியாவுக்கு சிங்கள அமைப்பு எச்சரிக்கை
கொழும்பு: இலங்கையின் உள்நாட்டுப் பிரச்சனைகளுக்குத் தீர்வு காண இந்தியாவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சிவசங்கர் மேனன் அல்லது தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் ஆலோசனைகள் எங்களுக்குத் தேவையில்லை என்று அந்நாட்டின் தேசப்பற்றுள்ள தேசிய இயக்கத்தின் தலைவர் குணதாச அமரசேகர கூறியுள்ளார்.
இது தொடர்பாக அவர் கூறியுள்ளதாவது:
இந்தியாவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சிவசங்கர் மேனன் இலங்கையில் ஒரு கதையையும், இந்தியாவில் மற்றுமொரு கதையையும் கூறுகின்றார். மேனன் மட்டுமல்ல ஜெயலலிதாவின் ஆலோசனையும் எங்களுக்குத் தேவையில்லை. எமது நாட்டுப் பிரச்சினைகளைத் தீர்த்துக்கொள்வதற்கு எங்களுக்குத் தெரியும்.
தமிழர்கள் வாழும் வட மாகாணசபைத் தேர்தலை நடத்தி முடிப்பதற்கு இந்தியா ஏன் அவசரப்படுகின்றது? அமெரிக்கா ஏன் இந்த விடயத்தில்அதிக நாட்டம் காட்டுகின்றது? வடக்கில் முழுமையாக அமைதி ஏற்பட்ட பின்னரே அங்கு தேர்தலை நடத்தவேண்டும். வடக்கில் இன்னும் முழுமையான அமைதி திரும்பவில்லை. அங்கு விடுதலைப் புலிகளின் அச்சுறுத்தல் நீடிக்கிறது
இந்திராகாந்தி அம்மையார் அன்று ஆயுதங்களை வழங்கிப் புலிகளை வளர்த்துவிட்டதுபோல் இன்று அரசியல் உரிமைகளைப் பெற்றுக்கொடுத்து விடுதலைப் புலிகளைப் பலப்படுத்துவதற்கு இந்தியா முயற்சிக்கின்றது
விடுதலைப் புலிகளின் சர்வதேச வலையமைப்பு இன்று பலமாக உள்ளது. உள்நாட்டிலும் புலிகளின் பலம் முழுதாகக் குன்றவில்லை. வவுனியா சிறைச்சாலையில் சிறை அதிகாரிகள் பிணைக் கைதிகளாக பிடித்து வைக்கப்பட்ட சம்பவம் இதனையே எடுத்துக்காட்டுகின்றது என்றார் அவர்.












Click it and Unblock the Notifications