முறைகேடான காப்பகத்தில் இருந்து 19 குழந்தைகள் மீட்பு: பெற்றோரிடம் ஒப்படைக்க ஏற்பாடு
நெல்லை: குமரி மாவட்டத்தில் அனுமதியின்றி நடத்தப்பட்ட காப்பகத்தில் இருந்து மீ்ட்கப்பட்ட குழந்தைகள் நேற்று நெல்லை சரணாலயத்தில் ஒப்படைக்கப்பட்டனர்.
குமரி மாவட்டம் குலசேகரம் அருகே உள்ள பொன்மனை மங்கலபலவூர் பகுதியில் அனுமதி இல்லாமல் குழந்தை காப்பகம் ஒன்று இயங்கி வந்தது. இது குறித்து குமரி மாவட்ட குழந்தைகள் நலக் குழுவைச் சேர்ந்த அப்துல் ஹக்கீம், மாவட்ட சமூக நலத்துறை அதிகாரி தேவிகுமாரி ஆகியோருக்கு தகவல் தெரிய வந்தது. உடனே அவர்கள் பொன்மனை பகுதிக்குச் சென்று அந்த குழந்தைகள் காப்பகத்தில் சோதனை செய்தனர். அக்காப்பகத்தை பொன்மனை பரவூர் பகுதியைச் சேர்ந்த ஏசையா என்ற மோகன் நடத்தி வருவது தெரிய வந்தது. அவர் கடந்த 5 ஆண்டுகளாக முறையான அனுமதி பெறாமல் இந்த குழந்தைகள் காப்பகத்தை நடத்தி வந்துள்ளார்.
இதை அறிந்து கடந்த 31.5.2012ல் அதிகாரிகள் காப்பகத்தை மூடினர். ஆனால் அதன் பிறகும் அங்கு குழந்தைகள் வந்ததால் எவ்வித அனுமதியும் இன்றி அந்த காப்பகத்தை திறந்து நடத்தி வந்துள்ளார். இதையடுத்து அங்கு தங்கி படித்து வந்த ஆண், பெண் குழந்தைகள் உள்பட 19 பேரை அதிகாரிகள் மீட்டனர். இவர்களில் 14 பேர் திருவூரைச் சேர்ந்தவர்கள். சேலம், சென்னை, ஒத்தகடையைச் சேர்ந்த தலா ஒருவரும் அங்கு தங்கி படித்துள்ளனர். மீட்கப்பட்ட அனைவரும் 5 வயதில் இருந்து 15 வயதுக்கு உட்பட்டவர்கள் ஆவர்.
குழந்தைகள் அனைவரும் நெல்லையில் உள்ள சரணாலயத்திற்கு நேற்று பாதுகாப்பாக கொண்டு வரப்பட்டனர். சரணாலய இயக்குனர் மோட்சராஜன் மற்றும் குழந்தை நலக்குழுவினர் குழந்தைகளிடம் விசாரணை நடத்தினர். அவர்களை பெற்றோர்களிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.