கர்நாடக முதல்வராக வரும் 16ம் தேதி ஜெகதீஷ் ஷெட்டர் பதவியேற்பு?
பெங்களூர்: கர்நாடக மாநிலத்தின் புதிய முதல்வராக வரும் 16-ந் தேதி ஜெகதீஷ் ஷெட்டர் பதவியேற்கக் கூடும் எனத் தெரிகிறது.
கர்நாடக மாநில ஆளும் பாஜகவில் ஓராண்டு காலமாக நீடித்து வந்த உட்கட்சி குழப்பத்தின் கிளைமேக்ஸ் நெருங்கிவிட்டது என்றே கூறலாம். சுரங்க முறைகேட்டில் சிக்கிய எதியூரப்பா தம்மை மீண்டும் முதல்வராக்க வேண்டும் என்று வலியுறுத்திப் பார்த்தார். அது பலன் தரவில்லை.
இதனால் சாதி அடையாளத்தை கையில் எடுத்தா. தமக்கு பதவி கொடுக்காவிட்டாலும் பரவாயில்ல தமது சமூகத்தை ஜெகதீஷ் ஷெட்டரை முதல்வராக்குங்கள் என்று லாபி செய்து பார்த்தார். இந்த லாபி சூப்பராக ஒர்க் அவுட் ஆகிவிட்டது. இதற்குக் காரணம் குடியரசுத் தலைவர் தேர்தல்தான்!
ஐக்கிய முற்போக்குக் கூட்டணி வேட்பாளராக பிரணாப் முகர்ஜி அறிவிக்கபப்ட்ட நிலையில் அவரை ஆதரிப்போம் என்று எதியூரப்பா அறிவித்திருந்தார். இப்போது பாஜக சங்மாவை ஆதரிக்கிறது. பாஜக ஆதரிக்கும் சங்மாவை ஒருவேளை எதியூரப்பா ஆதரவாளர்கள் ஆதரிக்காமல் போனால் நிலைமை மிகவும் சிக்கலாகிவிடும் என்பதால் ஒரு முடிவெடுத்தாக வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டது பாஜக மேலிடம். குடியரசுத் தலைவர் தேர்தல் முடியட்டும் பார்க்கலாம் என்று பாஜக மேலிடம் தரப்பில் கூறப்பட்டாலும் குடியரசுத் தலைவர் தேர்தலுக்கு முன்பே முடிவெடுங்கள் என்று நிர்பந்தித்தது எதியூரப்பா கோஷ்டி.
இதனால்தான் கட்சியின் மூத்த தலைவர் எல்.கே.அத்வானியின் எதிர்ப்பையும் மீறி வேறு வழியே இல்லாமல் லிங்காயத் சமூகத்தைச் சேர்ந்த ஜெகதீஷ் ஷெட்டரை முதல்வராக்கி சதனாந்த கவுடாவை நட்டாற்றில் விடுவது என்ற முடிவுக்கு பாஜக தலைவர் நிதின் கத்காரி வந்திருப்பதாக சொல்லப்படுகிறது.
மேலும் துணை முதல்வர் பதவியை ஒக்கலிகர் சமூகத்துக்கு கொடுத்துவிடுவதன் மூலம் எதிர்வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் இரண்டு சமூகத்தையும் அரவணைத்தது போலாகிவிடும் என்றும் பாஜக கருதுகிறது.இதனால் வரும் 16-ந் தேதி கூடவுள்ள சட்டப்பேரவை தொடரின் போதே ஜெகதீஷ் ஷெட்டர் முதல்வராக பதவியேற்கக் கூடும் என்றே கூறப்படுகிறது.