குழந்தையைப் பெற்று, இறந்தவுடன் அதை பையில் போட்டு தோழியிடம் கொடுத்த பள்ளி மாணவி
கோலாலம்பூர்: மலேசியாவில் 16 வயது பள்ளி மாணவி ஒருவர் இறந்த பச்சிளம்குழந்தையின் உடல் இருந்த தனது சக மாணவியின் பையை 17 மணிநேரமாக வைத்திருந்துள்ளார். அவருக்கு பையில் குழந்தையின் உடல் இருந்தது தெரியாது என்பது குறிப்பிடத்தக்கது.
மலேசியாவில் பள்ளியில் படிக்கும் மாணவி ஒருவர் பள்ளியிலேயே பெண் குழந்தையைப் பெற்றெடுத்துள்ளார். ஆனால் குழந்தை பிறந்தவுடன் இறந்துவிட்டது. இதையடுத்து அவர் குழந்தையின் உடலை புத்தகப்பையில் வைத்து தன்னுடன் படிக்கும் 16 வயது மாணவி ஒருவரிடம் கொடுத்துவிட்டார். அவரும் பைக்குள் புத்தகம் தான் இருக்கிறது என்று நினைத்து அந்த பையை 17 மணிநேரம் வைத்துள்ளார்.
இதற்கிடையே பிரசவித்த மாணவிக்கு வயிற்று வலி ஏற்படவே அவர் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு சென்றுள்ளார். அங்கு மருத்துவர்களிடம் நடந்ததையெல்லாம் தெரிவித்துவிட்டார்.
இது குறித்து ஏசிபி மனோகரன் செய்தியாளர்களிடம் கூறுகையில்,
புத்தகப்பையில் பச்சிளம் குழந்தையின் உடல் கண்டெடுக்கப்பட்டது. தன் தோழி கொடுத்த பையில் இருந்தது குழந்தையின் சடலம் என்பது தெரிய வந்ததும் அந்த மாணவி பீதியடைந்தார். குழந்தையின் உடலை பிரேத பரிசோதனை செய்ததில் அது பிறந்தவுடன் தலையில் காயம் மற்றும் நுரையீரல் பாதிப்பால் இறந்தது என்பது தெரிய வந்துள்ளது என்றார்.
மலேசியாவில் சிறுமிகள் இதுபோன்று கர்ப்பமாகி குழந்தையைப் பெற்று அதை எங்காவது போடுவது தொடர்கதையாகிவிட்டது. இந்த ஆண்டு மட்டும் இதுவரை 31 குழந்தைகள் கைவிடப்பட்டுள்ளன. அதில் 10 குழந்தைகள் உயிருடன் உள்ளன. 19 குழந்தைகள் இறந்துவிட்டன. மேலும் 2 குழந்தைகளின் நிலை குறித்து மருத்துவமனைகள் இன்னும் தெரிவிக்கவில்லை என்று அந்நாட்டு அரசு அதிகாரி ஹர்ஜித் சிங் தெரிவித்தார்.