தனியார் துறைகளில் முற்றாக புறக்கணிக்கப்படும் தாழ்த்தப்பட்ட மக்கள்!
தமிழ்நாட்டைப் பொறுத்தவரையில் மாநிலத்தின் மக்கள் தொகையில் 20 விழுக்காடு உள்ள தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடி இனத்தவர்கள் தனியார் துறைகளில் 18 விழுக்காடு வேலை வாய்ப்புகளைப் பெற்றுள்ளனர். ஆனால் மஹாராஷ்டிரா, குஜராத், கர்நாடகா, மத்திய பிரதேசம், ராஜஸ்தான் மற்றும் மேற்குவங்க மாநிலங்களில் கணிசமான அளவு தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடி வகுப்பினருக்கான வேலை வாய்ப்பு அப்படியாக இல்லை.
மஹாராஷ்டிராவில் மொத்த மக்கள் தொகையில் 19.1% தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியினர். ஆனால் அவர்கள் தனியார் துறைகளில் பெற்றுள்ள வேலை வாய்ப்பு விழுக்காடு 5 விழுக்காடுதான்!
குஜராத் மற்றும் கர்நாடக மாநிலங்களில் மொத்த மக்கள் தொகையில் தாழ்த்தப்பட்ட, பழங்குடியின மக்கள் தொகையினர் 22% மற்றும் 23%. ஆனால் தனியார் துறை வேலைவாய்ப்புகளில் இவர்கள் பெற்றுள்ளதோ வெறும் 9 விழுக்காடுதான்.
இதைவிட கொடுமை என்னவெனில் சத்தீஸ்கர் மாநிலத்தில் ஏராளமான தொழிற்சாலைகள் இருக்கின்றன. அதற்கேற்ப மக்கள் தொகையில் 43.4 விழுக்காடு மக்கள் பழங்குடியினர். சரி இவர்களுக்கு இந்த தனியார் தொழிற்சாலைகளில் எவ்வளவு வேலை வாய்ப்பு? 20 விழுக்காடு அளவுக்குத்தான்!
நாட்டின் கிழக்கு மாநிலங்களில்தான் அதிகளவு தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியினர் தனியார் துறைகளில் வேலைவாய்ப்புகளைப் பெற்றிருக்கின்றனர்.
மேற்கு மாநிலமான மஹராஷ்டிராவில் தமிழ்நாட்டுக்கு அடுத்து தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடி இன மக்கள் ஓரளவு வேலைவாய்ப்புகளைப் பெற்றிருக்கின்றனர் என்றே சொல்லலாம்.
கேரள மாநிலம் 100 விழுக்காடு கல்வி கற்ற மாநிலம். மாநிலத்தின் மொத்த மக்கள் தொகையில் தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடி இன மக்களின் விழுக்காட்டைவிட மிகவும் கூடுதலாக தனியார் துறையில் வேலை வாய்ப்பு அவர்களுக்கு கிடைத்திருக்கிறது.
வட மாநிலங்களில் டெல்லி மற்றும் ஹரியானாவில் ஓரளவு தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடி இனத்தவருக்கு தனியார் துறையில் வேலை வாய்ப்பு கிடைத்திருக்கிறது. ஆனால் பஞ்சாப் மற்றும் ராஜஸ்தான் மாநிலங்களில் மக்கள் தொகையில் தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடி இனத்தவரின் விகிதத்தைவிட அவர்களுக்கு தனியார் துறையில் கிடைத்திருக்கு வேலை வாய்ப்பு விழுக்காடு கணிசமாக குறைந்தே இருக்கிறது.
தனியார்துறையில் இடஒதுக்கீடு பின்பற்ற வேண்டும் என்ற நீண்டகால தமிழகத்தின் கோரிக்கையில் நியாயம் இருக்கிறதோ?