நல்ல முதல்வராகத் தானே இருந்தார், அப்புறம் ஏன்?: சதானந்த கவுடா மனைவி கேள்வி

கட்சி மேலிடத்தின் நெருக்கடியால் சதானந்த கவுடா கர்நாடக முதல்வர் பதவியில் இருந்து இன்று விலகினார். அவருக்குப் பதிலாக பாஜக தலைவர் ஜெகதீஷ் ஷெட்டார் முதல்வராகவிருக்கிறார். இந்நிலையில் சதானந்த கவுடா தனது பதவியை ராஜினாமா செய்தது அவரது குடும்பத்தாரை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
இது குறித்து சதானந்த கவுடாவின் சகோதரர் பாஸ்கர் கவுடா கூறுகையில்,
இது நடந்திருக்கக் கூடாது. அவரை தனது பதவிக்காலத்தை முடித்திருக்க அனுமதித்திருக்க வேண்டும். அவர் 11 மாதங்களாக நேர்மையான முதல்வராக இருந்தார். இந்த தகவல் அறிந்து எங்கள் தாய் கலங்கிவிட்டார். அவர் எதுவும் கூறாவிட்டாலும், அவரது முகமே காட்டிக் கொடுத்தது என்றார்.
சதானந்த கவுடாவின் மனைவி டாட்டி கவுடா கூறுகையில்,
அவர் முதல்வராக இருந்த 11 மாதமும் சிறப்பாகத் தானே செயல்பட்டார். அப்புறம் ஏன் இப்படி? கட்சி தலைமை இப்படி ஒரு முடிவை எடுக்கக் காரணம் என்ன? என்ன நடந்தாலும் அவர் கட்சிக்கு உண்மையாக இருப்பார். அவர் குடும்பத்திற்கு எந்த கெட்டப்பெயரும் வாங்கிக் கொடுக்கவில்லை. நாங்கள் மக்கள் மத்தியில் பெருமையுடன் தலை நிமிர்ந்து நடக்கிறோம். பாஜக தலைவர் எல்.கே. அத்வானி, கர்நாடக ஆளுநர் பரத்வாஜ் மற்றும் கர்நாடக மக்கள் அவரது பணியை பாராட்டியுள்ளது தான் பெரிய விஷயம் என்றார்.
பாஜகவினர் கூறுகையில்,
இந்த விவகாரத்தால் வெட்கப்படுகிறோம். வெளிப்படையாக சொல்ல முடியாவிட்டாலும், நாங்கள் கவுடாவுக்கு ஆதரவாக உள்ளோம். அவருக்குப் பதில் எதியூரப்பா முதல்வராகி இருந்தாலும் பரவாயில்லை. சம்பந்தமே இல்லாமல் ஜெகதீஷ் ஷெட்டாரை முதல்வராக்குகிறார்கள் என்றனர்.
சதானந்த கவுடாவுக்கு அநீதி இழைக்கப்பட்டுள்ளதாக அவரின் சொந்த ஊரான சுல்லியா, அவரது முன்னாள் தொகுதிகளான புத்தூர் மற்றும் உடுப்பி மக்கள் நினைக்கின்றனர்.












Click it and Unblock the Notifications