சதானந்த கவுடாவை நீக்கினால் பொறுத்துக் கொள்ள மாட்டோம்: ஒக்கலிகா சமூகத்தினர் எச்சரிக்கை
பெங்களூர்: கர்நாடக முதல்வர் பொறுப்பில் இருந்து சதானந்த கவுடா விலக முடிவு செய்துவிட்ட நிலையில் அவர் சார்ந்த ஒக்கலிகர் சமூகத்தினர் அதை ஏற்றுக் கொள்ள முடியாது என்று போர்க்கொடி தூக்கியுள்ளனர்.
ஒக்கலிகா சமூகத்தைச் சேர்ந்த சதானந்த கவுடாவை நீக்கிவிட்டு மற்றொரு பெரும்பான்மை சமூகமான லிங்காயத் சமூகத்தின் ஜெகதீஷ் ஷெட்டர் முதல்வர் ஆக்கப்படுவது உறுதியாகிவிட்டது. இதற்கான அறிவிப்பு இன்று வெளியாக உள்ளது.
இந்நிலையில் பெங்களூரில் செய்தியாளர்களிடம் பேசிய ஒக்கலிகர் சமூகத்தினரின் சுவாமிகளான நஞ்சவதூட சுவாமிகள், சதானந்த கவுடா நீக்கப்படுவதை தங்களால் ஏற்றுக் கொள்ள முடியாது. அப்படி அவர் நீக்கப்பட்டால் அதற்கான விளைவுகளை பாஜக சந்திக்க நேரிடும். அவரை நீக்க வேண்டிய தேவைதான் என்ன?. அப்படி முதல்வர் மாற்றம் செய்யப்பட வேண்டுமெனில் ஒரு தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவரை முதல்வராக்குங்கள் என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
மேலும் சதானந்த கவுடாவை நீக்கினால் அதற்கு ஒக்கலிகா சமூகத்து அமைச்சர்களும் எம்.எல்.ஏக்களும் கடுமையாக எதிர்ப்புத் தெரிவிக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.
ஒக்கலிகா சங்கத் தலைவர் கெஞ்சப்பா கவுடா கூறுகையில், அனைத்துக் கட்சிகளிலும் இருக்கின்ற ஒக்கலிகா சமூகத்தைச் சேர்ந்த அரசியல் தலைவர்களின் ஆலோசனைக் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற உள்ளது. அந்தக் கூட்டத்தில் சதானந்த கவுடாவை நீக்குவதற்கு எதிர்ப்புத் தெரிவித்து போராட்டம் நடத்துவது குறித்து ஆலோசனை நடத்தப்படும் என்றார்.
கர்நாடகத்தில் ஒக்கலிகா சமூகத்தினர் 16 மாவட்டங்களில் பெரும்பான்மையினராக உள்ளனர். மொத்தம் 150 தொகுதிகளின் வெற்றியைத் தீர்மானிக்கக் கூடியவராக அவர்கள் இருக்கின்றனர்.