நொறுங்கித் தரைமட்டமாகும் அபாய நிலையில் பிரிட்டிஷ் ஜனநாயகம்!
உலகம் முழுவதும் பல நாடுகளுக்கு முன்னோடியாக, முன்மாதிரியாக இருந்தது பிரிட்டிஷ் ஜனநாயகம். ஆனால் இங்கிலாந்தில் இப்போது நிலைமை மாறி வருகிறது. அங்கு ஜனநாயகம் தேயத் தொடங்கியுள்ளது. இதற்குக் காரணம் தலை தூக்கி வரும் கார்ப்பரேட் நிறுவனங்களின் ஆதிக்கம், அரசு அமைப்புகளின் மீ்து நம்பிக்கையிழக்க ஆரம்பித்திருக்கும் மக்கள், அரசியல் ஸ்திரமின்மை அதிகரித்து வருவது ஆகியவையே காரணம்.
லிவர்பூல் பல்கலைக்கழகத்தின் டெமாக்ரடிக் ஆடிட் என்ற துறை நடத்திய கணிப்பில்தான் இது தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு முன்பு இந்தத் துறை 1996, 99 மற்றும் 2003 ஆகிய ஆண்டுகளில் இதுபோன்ற சர்வேயை நடத்தியிருந்தது.
இங்கிலாந்து ஜனநாயகத்திற்குப் பெரும் அச்சுறுத்தலாக ஐந்து காரணிகள் விளங்குவதாக இந்த சர்வே தெரிவிக்கிறது. அதில் மிக முக்கியமானதாக கார்ப்பரேட் நிறுவனங்களின் விஸ்வரூபம் காட்டப்பட்டுள்ளது. இந்த நிறுவனங்களின் கையில் சிக்கி ஜனநாயகம் உதைபட ஆரம்பித்துள்ளதாக அது கவலை தெரிவித்துள்ளது.
இப்படியே நிலைமை நீடித்தால் இங்கிலாந்தில் ஜனநாயகம் தேய்ந்து அழிந்து போய் விடும். இதைச் சரி செய்யும் மாற்று வழிகள் இப்போதைக்கு இல்லாத நிலையும் கவலை தருவதாக அது கூறுகிறது.
ஜனநாயகத்தின் மீது மக்கள் நம்பிக்கை இழக்க ஆரம்பித்துள்ளனர். குறிப்பாக அரசுத் துறைகள் மீது அவர்களுக்கு அவ நம்பிக்கை அதிகரித்து வருகிறது. திறமையற்ற நிர்வாகமே நடப்பதாக அவர்கள் அதிருப்தியுடன் கூறுகின்றனர்.
அரசியல் ஸ்திரமின்மையும் இன்னொரு முக்கியக் காரணியாக கூறப்படுகிறது. அடிப்படை மனித உரிமைகள் கூட கேள்விக்குறியதாக மாறியுள்ளதாகவும் இந்த அறிக்கை தெரிவிக்கிறது.
பல்வேறு வகையிலும், வழிகளிலும் இங்கிலாந்தும் அதன் ஜனநாயகமும் பெருத்த சவால்களை சந்தித்து வருகின்றன. இதிலிருந்து இருவரும் எப்படி மீளப் போகிறார்கள் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும் என்று அந்த அறிக்கை சொல்கிறது.