துணை ஜனாதிபதி தேர்தல்: மமதா பரிந்துரைத்த காந்தியின் பேரன் போட்டியிட மறுப்பு!
குடியரசுத் தலைவர் தேர்தலில் பிரணாப் முகர்ஜியை காங்கிரஸ் கட்சி முன்னிறுத்தியது. ஆனால் திரிணாமுல் காங்கிரஸ் சார்பில் அப்துல்கலாம், மன்மோகன்சிங், சோம்நாத் சட்டர்ஜி ஆகியோர் பரிந்துரைக்கப்பட்டனர். கடைசியில் அப்துல்கலாமை களமிறக்க தீவிரமாக மமதா பானர்ஜி முயற்சித்தார். ஆனால் அப்துல்கலாம், குடியரசுத் தலைவர் தேர்தலில் போட்டியிட மறுத்துவிட்டார். இது மமதாவுக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தியது.
இப்பொழுது குடியரசு துணைத் தலைவர் தேர்தலிலும் இன்னொரு அடி வாங்கியிருக்கிறார் மமதா பானர்ஜி!
டெல்லியில் நேற்று நடைபெற்ற ஐக்கிய முற்போக்குக் கூட்டணியின் கூட்டத்தில் திரிணாமுல் காங்கிரஸ் சார்பில் கோபால் கிருஷ்ண காந்தி மற்றும் கிருஷ்ண போஸ் ஆகியோரது பெயர்கள் பரிந்துரைக்கப்பட்டன. ஆனால் அது நிராகரிக்கப்பட்டது. இந்நிலையில் மமதா பானர்ஜி முன்னிறுத்திய மேற்கு வங்க முன்னாள் ஆளுநரான கோபால் கிருஷ்ண காந்தி, துணை ஜனாதிபதி தேர்தலில் தாம் போட்டியிட விரும்பவில்லை என்று இன்று அதிரடியாக அறிவித்துவிட்டார்.
இதனால் மமதா பானர்ஜிக்கு மற்றுமொரு அடி விழுந்திருக்கிறது.