என்னது ..மும்பை தாக்குதலில் ஐ.எஸ்.ஐக்கு தொடர்பா?...நம்பவே முடியலையே..: பாக். புதிய தூதர்
டெல்லி: மும்பை தாக்குதல் சம்பவத்தில் பாகிஸ்தான் உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐக்கு தொடர்பிருப்பதாக கூறப்படுவது நம்பக் கூடியதாக இல்லை என்று இந்தியாவுக்கான பாகிஸ்தானின் புதிய தூதர் சல்மான் பஷீர் தெரிவித்துள்ளார்.
மும்பை தாக்குதலில் ஐ.எஸ்.ஐக்கு தொடர்பி இருப்பதாக அமெரிக்காவில் கைது செய்யப்பட்ட ஹெட்லி தெரிவித்திருந்தான். அதைப்போலவே அண்மையில் சவூதி அரேபியாவில் பதுங்கியிருந்து இந்தியாவிடம் சிக்கியுள்ள அபு ஜிண்டாலும் கூறியிருந்தான். அபுஜிண்டால் தனது வாக்குமூலத்தில் ஐ.எஸ்.ஐயின் பங்கு பற்றி விரிவாகவே கூறியிருந்தான்.
இந்நிலையில் இந்தியாவுக்கான புதிய தூதரான சல்மான் பஷீர் நேற்று டெல்லியில் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
பாகிஸ்தான் ராணுவ தலைமையகமே தீவிரவாதிகளின் தாக்குதலுக்கு உள்ளாகி இருக்கிறது. உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐயின் அலுவலகமும் தாக்கப்படுகிறது. இந்த நிலையில் மும்பை தாக்குதலில் ஈடுபட்ட தீவிரவாதிகளுக்கு பாகிஸ்தான் உளவு அமைப்பு உதவி செய்தது என்று கூறுவது நம்ப முடியவில்லை.. வியப்புக்குரியது.
இந்தியாவுடன் உறவுகளை வலுப்படுத்த புதிய வழிகளை பாகிஸ்தான் ஆராய்கிறது. மும்பை தாக்குதல் பற்றி கூட்டாக விசாரணை நடத்த வேண்டும் என்று பாகிஸ்தான் கோருகிறது. ஆனால் இந்தியா எந்த பதிலும் தரவில்லை என்றார் அவர்.