சட்டவிரோதமாக மீன்பிடிப் படகில் ஆஸ்திரேலியா செல்ல முயற்சி: மேலும் 65 ஈழத் தமிழர்கள் கைது
திருகோணமலை: இலங்கையில் இருந்து சட்டவிரோதமாக ஆஸ்திரேலியாவுக்கு அகதிகளால செல்ல முயன்ற 65 ஈழத் தமிழர்கள் இன்று அதிகாலை கைது செய்யப்பட்டுள்ளனர்.
இலங்கையின் கிழக்கு கடற்பரப்பில் ஆஸ்திரேலியா நோக்கி சென்ற மீன்பிடிப் படகை இலங்கை கடற்படை இடைமறித்தது. அதில் இருந்தோரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், திருகோணமலையின் கும்புறுபிட்டிய பகுதியிலிருந்து ஆஸ்திரேலியாவுக்கு அகதிகளாக சென்றவர்கல் எனத் தெரியவந்தது.
இதையடுத்து அனைவரும் கைது செய்யப்பட்டு திருகோணமலை துறைமுகத்துக்கு கொண்டுவரப்படுகின்றனர். நேற்று முன் தினம் 101 தமிழர்களும் 8 சிங்களவர்களும் ஆஸ்திரேலியா செல்லும் வழியில் கைது செய்யப்பட்டிருந்தனர். அதே நாளில் சிலாபத்திலிருந்து ஆஸ்திரேலியா செல்வதற்காக காத்திருந்த 22 பேர் கைது செய்யப்பட்டிருந்தனர்.
திருப்பி அனுப்புங்க
இதனிடையே இலங்கையில் இருந்து புகலிடம் கோரி மீன்பிடிப் படகுகளில் அகதிகளாக வருவோரை நடுக்கடலிலேயே வழிமறித்து திருப்பி அனுப்பிவிட வேண்டும் என்று ஆஸ்திரேலியாவுக்கான இலங்கை தூதர் திசேர சமரசிங்க கூறியுள்ளார். படகுகளைத் திருப்பி அனுப்பினால்தான் இலங்கையைவிட்டு வெளியேற முடியாது என்ற நிலைமையை அவர்கள் உணர முடியும் என்றும் அவர் கூறியுள்ளார்.
திருப்பி அனுப்ப எதிர்ப்பு
ஆனால் ஈழத் தமிழர் அமைப்பின் தலைவர் பாலா இதற்கு எதிர்ப்புத் தெரிவித்துள்ளார். சர்வதேச கடற்பரப்பில் புகலிடம் கோரி வருவோரை எது பக்கத்து நாடு அந்த நாடு மீட்க வேண்டியது கடமை என்பதை சுட்டிக்காட்டியுள்ள அவர், புகலிடம் கோருவோரை பாதுகாக்க வேண்டிய பொறுப்பு அனைத்து நாடுகளுக்கும் உண்டு என்று கூறியுள்ளார்.