இலங்கை ராணுவத்தினருக்கான பயிற்சியால் தமிழகத்தில் கொந்தளிப்பு: ஜெ. கடிதம்

குன்னூர் வெலிங்டன் பயிற்சி மையத்தில் நடைபெறும் முகாமில் கலந்து கொள்ள இலங்கை ராணுவ அதிகாரிகள் வந்துள்ளனர். இலங்கை ராணுவ அதிகாரிகள் வந்திருக்கும் தகவலால் நேற்று முதல் அங்கு பதற்றமான சூழ்நிலை நிலவி வருகிறது. மதிமுகவினர் நேற்றே போராட்டத்தில் ஈடுபட்டனர். இன்று வெலிங்டன் பயிற்சி மைய முற்றுகைப் போராட்டம் நடத்த தமிழ் அமைப்புகள் அழைப்புவிடுத்துள்ளன.
இந்நிலையில் பிரதமர் மன்மோகன்சிங்குக்கு இது தொடர்பாக தமிழக முதல்வர் ஜெயலலிதா கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார்.
அதில் கூறப்பட்டுள்ளதாவது:
சென்னை தாம்பரத்தில் பயிற்சி பெற வந்த இலங்கை விமானப் படை வீரர்களை இந்தியாவில் இருந்து வெளியேற்ற வேண்டும் என்று தமிழக அரசு வலியுறுத்தியது. ஆனால் அவர்கள் வெளியேற்றப்படவில்லை.
இந்த நிலையில் குன்னூர் வெலிங்டன் பயிற்சி மையத்துக்கு இலங்கை ராணுவ அதிகாரிகள் பயிற்சிக்கு வந்துள்ளனர். தமிழகத்தின் எதிர்ப்பையும் மீறி இலங்கை ராணுவத்தினருக்கு பயிற்சி தரும் மத்திய அரசின் பிடிவாதப் போக்கால் தமிழக மக்கள் கொந்தளிப்புடன் இருக்கின்றனர்.
இலங்கை ராணுவத்தினருக்கான பயிற்சியை ரத்து செய்து அவர்களை சொந்த நாட்டுக்கு திருப்பி அனுப்ப வேண்டும். இலங்கை ராணுவத்தினருக்கான அனைத்து பயிற்சிகளை ரத்து செய்ய பாதுகாப்பு அமைச்சகத்துக்கு அறிவுறுத்த வேண்டும் என்று அதில் ஜெயலலிதா குறிப்பிட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications