மானபங்க சம்பவம்: அசாம் பெண்ணின் விவரத்தை வெளியிட்ட பெண்கள் ஆணைய உறுப்பினர் நீக்கம்
குடிகார கும்பலால் இளம்பெண் மானபங்கம் செய்யப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இச்சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்த தேசிய பெண்கள் ஆணையமும் உண்மை கண்டறியும் குழு ஒன்றை அனுப்பியது. அதில் இடம்பெற்றிருந்தவர்தான் அல்கா லம்பா. பெண்கள் ஆணையத்தின் குழு பாதிக்கப்பட்ட பெண்ணை நேரில் சந்தித்து உண்மைகளைக் கேட்டறிந்தது. பின்னர் இச்சம்பவம் தொடர்பாக குவஹாத்தியில் செய்தியாளர்களையும் சந்தித்தனர்.
அச்சந்திப்பில் பாதிக்கப்பட்ட இளம்பெண் யார் என்ற விவரத்தை அல்கா லம்பா பகிரங்கப்படுத்தினார். பொதுவாக இதுபோன்ற சம்பவங்களில் பாதிக்கப்பட்டவரின் பெயரை பகிரங்கப்படுத்தக் கூடாது. இதையே உச்சநீதிமன்றமும் அறிவுறுத்தியிருக்கிறது. ஆனால் பாதிக்கப்பட்ட இளம்பெண் பற்றிய தகவலை அல்கா லம்பா வெளியிட்டதற்கு பாஜக உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் கடும் எதிர்ப்புத் தெரிவித்தன. இதனால் புதிய சர்ச்சை எழுந்தது.
இச்சர்ச்சைக்கு முற்றுப் புள்ளி வைக்கும் வகையில் அல்கா லம்பாவை உண்மை கண்டறியும் குழுவில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். தேசிய பெண்கள் ஆணையத்தின் செய்தி தொடர்பாளர் மமதா சர்மா இத்தகவலைத் தெரிவித்துள்ளார்.