குன்னூரிலிருந்து இலங்கை ராணுவத்தினரை திருப்பி அனுப்ப கருணாநிதி-ராமதாஸ் கோரிக்கை
சென்னை: இலங்கை ராணுவத்தினருக்கு இந்தியாவில் பயிற்சி அளிப்பதை ஏற்றுக் கொள்ள இயலாது. தமிழர்கள் மனதை புண்படுத்தும் செயலை மத்திய அரசு தவிர்க்க வேண்டும் என்று திமுக தலைவர் கருணாநிதி கூறியுள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள கேள்வி-பதில் அறிக்கையில் கூறியிருப்பதாவது:
கேள்வி: வெலிங்டன் ராணுவப் பயிற்சி கல்லூரியில் இலங்கை ராணுவ அதிகாரிகளுக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது என்று கூறி பல்வேறு கட்சியினரும் எதிர்ப்பு தெரிவித்திருக்கிறார்களே?
பதில்: அங்கு பல்வேறு நாடு களை சேர்ந்த ராணுவ அதிகாரிகளுக்கு பயிற்சி அளிக்கப்படுவதாகவும், இப்போது 10 நாடுகளை சேர்ந்த 25 அதிகாரிகள் பங்கேற்க உள்ளனர் என்றும், அதில் 2 பேர் இலங்கை ராணுவ அதிகாரிகள் என்றும் செய்தி வந்துள்ளது. இலங்கை ராணுவத்தினர் தொடர்ந்து ஈழத் தமிழர் களை தாக்கி கொடுமைப்படுத்தி வரும் நிலையில், அந்த ராணுவத்தினருக்கு இந்தியாவில் பயிற்சியளிப்பதை ஏற்றுக் கொள்ள இயலாது.
இது உண்மையாக இருக்குமேயானால், மத்திய அரசு உடனடியாக அவர்களைத் திருப்பி அனுப்புவதற்கான ஏற்பாடுகளைச் செய்ய வேண்டும். இதுபோன்ற செயல்களில் மத்திய அரசு ஈடுபட்டு தமிழர்களின் மனதை புண்படுத்தும் செயலை தவிர்க்க வேண்டும்.
கேள்வி: ஜூலை 4ம் தேதி அதிமுக அரசுக்கு எதிராக திமுக நடத்திய ஆர்ப்பாட்டம் வெற்றியா? தோல்வியா?
பதில்: இந்த கேள்விக்கு நான் பதில் அளிப்பதைவிட, இரண்டு வார ஏடுகள் எழுதிய கட்டுரையை படித்தாலே திமுக ஆர்ப்பாட்டம் வெற்றியா தோல்வியா என்பதை அவரவர் புரிந்து கொள்ளலாம்.
கேள்வி: பஞ்சாயத்து தலைவர் கொலை வழக்கை சி.பி.ஐ விசாரிக்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறதே?
பதில்: ஆமாம். வீரன் என்ப வர் திருமணம் கிராம பஞ்சாயத்து தலைவராக இருந் தார். உள்ளாட்சி தேர்தலில் அதிமுகவினர் அங்கே வெற்றி பெறவில்லை. அதனால் அந்த தொகுதியின் அதிமுக எம்எல்ஏ மணிமாறனுக்கும், திருமணம் பஞ்சாயத்து தலைவர் வீரனுக்கும் முன் விரோதம் இருந்தது என்றும், ஏப்ரல் மாதத்தில் வீரன் கொலை செய்யப்பட்டார் என்றும், அதில் அதிமுக சட்டமன்ற உறுப்பினருக்கு தொடர்பு உள்ளது என்றும் வீரனின் மனைவி கலெக்டரிடம் மனு கொடுத்தும் நடவடிக்கை இல்லை என்றும், எனவே அந்த வழக்கை சிபிஐ விசாரணை நடத்த உத்தரவிட வேண்டுமென்றும் உய ர்நீதிமன்றத்தில் வீரனின் மனைவி வழக்கு தாக்கல் செய்தார்.
அந்த வழக்கை விசாரித்த நீதிபதி நாகமுத்து, புலன் விசாரணை அறிக்கை திருப்தியாக இல்லை, போதிய ஆதாரம் கிடைக்கவில்லை என்று போலீஸ் தரப்பில் கூறியுள்ளனர், இதில் சிபிஐ விசாரிப்பது தான் சரியானது என்று கூறி, சிபிஐ இந்த வழக்கை விசாரிக்க வேண்டுமென்று தீர்ப்பு கூறியிருக்கிறார். அதிமுக அரசு, ஆளுங்கட்சியினருக்கு துணையாக இருக்கிறது என்பதற்கு இது மற்றுமோர் உதாரணம். இவ்வாறு கருணாநிதி கூறியுள்ளார்.
அதிகாரிகளை திருப்பி அனுப்பவேண்டும்-ராமதாஸ்:
இந்தியாவில் பயிற்சி பெற வந்துள்ள இலங்கை விமானப்படை, கடற்படை அதிகாரிகளை உடனடியாக திருப்பி அனுப்ப வேண்டும் என்று பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் கோரிக்கை விடுத்துள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஏற்கெனவே இலங்கை விமானப்படை வீரர்கள் 9 பேருக்கு சென்னை தாம்பரம் விமானப்படை நிலையத்தில் பயிற்சி அளிக்கப்பட்டது. இதற்கு எதிராக ஒட்டுமொத்த தமிழகமும் குரல் கொடுத்ததையடுத்து அவர்களுக்கான பயிற்சி பெங்களூருக்கு மாற்றப்பட்டது. அங்கிருந்தும் அவர்களை வெளியேற்றவேண்டும் என்ற கோரிக்கை இன்னும் ஏற்கப்படவில்லை.
இந் நிலையில், தற்போது இலங்கை விமானப்படை மற்றும் கடற்படையைச் சேர்ந்த 2 அதிகாரிகள் குன்னூரில் உள்ள பாதுகாப்பு சேவை அதிகாரிகள் கல்லூரியில் நடைபெறும் பயிற்சிகளை பார்வையிட அழைத்து வரப்பட்டுள்ளனர்.
இலங்கைப் படையினருக்கு இந்தியாவின் எந்த பகுதியிலும் பயிற்சி அளிக்கப்படக்கூடாது என்று ஒட்டுமொத்த தமிழகமும் வலியுறுத்தி வரும் நிலையில், சிங்கள அதிகாரிகளை மீண்டும் தமிழகத்திற்கு அழைத்து வந்து பயிற்சி அளிப்பது தமிழர்களை அவமதிக்கும் செயலாகும்.
எனவே, குன்னூருக்கு வந்துள்ள இலங்கை ராணுவ அதிகாரிகளுக்கும், பெங்களூரில் சிங்கள விமானப்படை வீரர்களுக்கும் அளிக்கப்பட்டு வரும் பயிற்சியை உடனடியாக நிறுத்தி அவர்களை இலங்கைக்கே திருப்பி அனுப்பவேண்டும் என்று வலியுறுத்துகிறேன் என்று கூறியுள்ளார்.