ஜனாதிபதி தேர்தல்: பிரணாப் முகர்ஜிக்கு அதிமுக கூட்டணியில் மேலும் ஒரு கட்சி ஆதரவு
சென்னை: அதிமுக கூட்டணியில் அங்கம் வகிக்கும் புதிய தமிழகம் கட்சி குடியரசுத் தலைவர் தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் அதிகாரப்பூர்வ வேட்பாளரான பிரணாப் முகர்ஜிக்கு ஆதரவு தெரிவித்துள்ளது.
இது குறித்து புதிய தமிழகம் கட்சி தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி செய்தியாளர்களிடம் கூறுகையில்,
குடியரசுத் தலைவர் தேர்தல் வரும் 19ம் தேதி நடைபெறுகின்றது. இந்த தேர்தலில் புதிய தமிழகம் கட்சியின் சட்டமன்ற உறுப்பினர்கள் இருவரும் ஐக்கிய முற்போக்கு கூட்டணி வேட்பாளரான பிரணாப் முகர்ஜிக்கு ஆதரவு அளிப்பது என்று முடிவு செய்துள்ளோம்.
பிரணாப் முகர்ஜியை நாங்கள் ஆதரிப்பதால் அதிமுக கூட்டணிக்கு நாங்கள் எதிரானவர்கள் அல்ல. நாங்கள் தற்போதும் அதிமுக கூட்டணியில் தான் உள்ளோம்.
சங்கரன்கோவில் மற்றும் புதுக்கோட்டை இடைத்தேர்தலின்போது தமிழக முதல்வர் ஜெயலலிதா என்னை தொலைபேசியில் தொடர்பு கொண்டு அதிமுகவுக்கு ஆதரவு அளிக்கும்படி கேட்டுக்கொண்டார். ஆனால் குடியரசு தலைவர் தேர்தல் குறித்து அவர் எதுவும் கூறவில்லை. அதனால் சுதந்திரமாக முடிவு எடுத்துள்ளோம். மேலும் பிரணாப் முகர்ஜியே என்னை தொலைபேசியில் தொடர்பு கொண்டு தனக்கு ஆதரவு அளிக்கும்படி கேட்டுக் கொண்டார். அதனால் தான் அவருக்கு முழு ஆதரவு அளித்துள்ளோம் என்றார்.
அதிமுக கூட்டணியில் உள்ள மனிதநேய மக்கள் கட்சி ஏற்கனவே பிரணாப் முகர்ஜிக்கு ஆதரவு தெரிவித்துள்ளது. இந்நிலையில் அதிமுக கூட்டணியில் உள்ள மேலும் ஒரு கட்சி பிரணாபுக்கு ஆதரவளித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications